சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நடந்த இப்போர் வரலாற்றில் மறக்க முடியாதப் போர்களில் ஒன்று. இரண்டாம் உலகப்போரின் போது இது நடந்தபோதும், இதற்கெனத் தனியாக சுவடுகள் உண்டு. உலக மானுடத்தின் மீது இப்போர் ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் மறையாதவை. ஜூலை 7, 1937 முதல் செப்டம்பர் 2 ,1945 வரை நடந்த இப்போரை ‘இரண்டாம் சீன ஜப்பானியப் போர்’(Second Sino-Japanese War) என அழைக்கிறார்கள். 1937-இல் துவங்கிய இப்போர் 1941 வரை சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையே மட்டும்தான் நடந்துக்கொண்டிருந்தது. டிசம்பர் 7, 1941-ஆம் ஆண்டு ஜப்பான் வட அமெரிக்க போர்க்கப்பல்கள் நிலை கொண்டிருந்த ‘பேர்ல் ஹார்பர்’(Pearl Harbor)-ஐத் தாக்கியதும் அதற்கு பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி என வட அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் இறங்கியதும் நாம் அறிந்ததுதான். அதன்பிறகு ஜப்பானுக்கு பெரும் எதிரிகள் வந்து சேர்ந்தார்கள்.

சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே முதல் போர் மூண்டது ஆகஸ்டு 1,1894 – ஏப்ரல் 17,1895 காலகட்டத்தில். ‘முதலாம் சீன ஜப்பானியப் போர்’ என அழைக்கப்படும் இப்போர், கொரியாவை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதை அடிப் படையாகக் கொண்டது. கொரியா நீண்ட காலமாக சீனாவின் ‘குயிங் வம்சத்தின்’(Qing Dynasty) ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அதைத் தட்டிப்பறிப்பதன் மூலம் கொரியாவின் வளங்களைத் தனதாக்கிக் கொள்ள ஜப்பான் விரும்பியது. அதன் பொருட்டே முதல் போர் அவ்விருநாடுகளுக்கிடையே ஏற்பட்டது. ஜப்பானுக்கு சாதமாக அப்போர் முடிவடைந்தது. 

பின்பு 1931-லிருந்தே இரண்டு நாடுகளுக்கிடையே சிறிது சிறிதான போர்கள் நடந்த போதும் 1937-க்கு பிறகு அது பெரும் போராக உருவெடுத்தது. சீனாவை ஆக்கரமிப்பதன் மூலம் அதன் பரந்து விரிந்த நிலப்பரப்பை அடைவதுடன், அதன் வளங்களையும் தனதாக்கிக் கொள்ள முயன்றது ஜப்பான். குறிப்பாக அதன் மக்கள் மற்றும் உணவு வளத்தை குறிவைத்தே சீனாவின் மீது ஜப்பான் போர் தொடுத்தது. ஜப்பானின் ஏகாதிபத்திய கொள்கையின் முகமாகவே இது பார்க்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் நடந்த போர்களிலேயே ‘இரண்டாம் சீன ஜப்பானியப் போர்’ தான் ஆசியாவின் மிகப்பெரிய போர் என பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

1937-க்குப் பிறகு உக்கிரமடைந்த இப்போரில், முதலில் ஷாங்காய் நகரை ஜப்பான் கைப்பற்றியது. பின்பு அவ்வாண்டின் இறுயில் (டிசம்பர் 13), சீனாவின் அப்போதைய தலைநகராக இருந்த ‘நாகிங்’(Nanking) நகர் ஜப்பானின் கைகளில் விழுந்தது. தாக்குப் பிடிக்க முடியாத சீனக் குடியரசு அரசாங்கம் தன் தலைநகரை காலிச் செய்துவிட்டு ‘வுகன்’(Wuhan) நகருக்கு தப்பி ஓடியது. அதன் பின்தான் வரலாற்றில் மறக்க முடியாத அச்சம்பவங்கள் நடந்தேறியன. ‘நாகிங் படுகொலை’(Nanking Massacre) என அழைக்கப் படும் அச்சம்பவம் பெரும் துயரங்களைக் கொண்டது. பெரும் எண்ணிக்கையில் படுகொலைகள், கற்பழிப்புகள், கொள்ளைகள் நடந்தேறியன. சீன அரசாங்கத்தால் கைவிடப்பட்ட, கேட்க நாதியற்ற அப்பாவி நாகிங் நகர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினர். எதிர்த்து நிற்க ஆள் இல்லாதது ஜப்பானியர்களுக்கு பெரும் கொண்டாட்ட மாகியது. கட்டுபாடற்ற பெரும் அராஜகத்தை அவர்கள் அரங்கேற்றி னார்கள்.

இரண்டரையிலிருந்து மூன்று லட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டார்கள். இருபதா யிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இதற்கு சிறுமிகளும் வயதானவர்களும் கூடத் தப்ப முடிய வில்லை. இங்கே எழுத முடியாத அளவிற்கு அவர்கள் துன்புறுத்தபட்டு கொல்லப் பட்டார்கள். பிடிப்பட்ட வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அகதி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களை விருப்பம் போல் துன்புறுத்திக் கொன்றார்கள். ஆறு வாரத்திற்குள்ளாகவே பெரும் எண்ணிக்கையில் படுகொலை நிகழ்ந்தேறியது. ஜப்பானிய அதிகாரிகள் தங்களுக்குள்ளாக பல போட்டிகள் வைத்துக் கொண்டார்கள். அதில் ஒன்று யார் விரைவாக நூறு சீனர்களின் தலைகளை கத்தியால் கொய்வது என்பது. அப்படி போட்டியிட்டுக் கொண்ட இரண்டு ஜப்பானிய அதிகாரிகளின் பெயர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவ்விரண்டு அதிகாரிகளும் போரின் முடிவில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 2, 1945-இல் ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் தோல்வியுற்று, சரணடைந்தப் பிறகுதான் இப்படுகொலைகள் நின்றது.

அப்படி ஒரு படுகொலை சம்பவமே நடக்க வில்லை என்று ஜப்பான் இன்று வரை மறுக்கிறது. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இன்றுவரை உறுதி செய்யப் படவில்லை. ஆனாலும், அப்போது நாகிங் நகரில் வாழ்ந்த வெளிநாட்டினரால் அங்கே நடந்தவற்றில் பெரும்பாலனவைகளை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அரசுகள் ஒத்துக் கொள்கிறதோ இல்லையோ, வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்துதான் வந்திருக்கிறது.

நாகிங் படுகொலைகள் நடந்த காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘நாகிங்கின் பதிமூன்று மலர்கள்’(13 Flowers of Nanjing) என்ற நாவலை தழுவி ‘The Flowers of War’ என்ற படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உலகப்புகழ் பெற்ற இயக்குனரான ‘ஜாங் யுமோ’(Zhang Yimou)-வின் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் மிக உருக்கமான ஒரு சம்பவத்தை நம் கண் முன்னே நிகழ்த்துகிறது.

நாகிங் நகரம் ஜப்பானின் பிடிக்குள் விழுந்துக் கொண்டிருக்கும் நேரம் அது. யுத்த பூமி எங்கும் புகையும் புழுதியும் நிரம்பிக் கிடக்கிறது. நகரமே புகையால் மூடப் பட்டிருக்கிறது. மக்கள் தப்பி ஓடுகிறார்கள். பிழைத்து கிடந்த, தனித்து விடப்பட்ட சீன வீரர்கள் தங்களால் முடிந்த மட்டும் ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்த முயலு கிறார்கள். புகையின் ஊடாக அவ்வபோது எதிர்படும் மனிதர்கள் யார் என்பதைக்கூட அடையாளம் காண முடியா நிலைமை அது. அப்புகையின் ஊடே சில சிறுமிகள் தப்பி ஓடி வருகிறார்கள். ஒரு குதிரை வண்டியில் சில பெண்கள் தப்பி ஓடுகிறார்கள். ஒரு புறம் ஜப்பானியர்கள் சீனர்களைத் தேடித்தேடி கொல்லுகிறார்கள். ஒரு அமெரிக்க மனிதனும் தப்பி ஓடிவருகிறான். இவர்கள் அனைவரும் பெரும் பாடுபட்டு ஒரு கத்தோலிக்க மடத்தில் அடைக்களம் அடைகிறார்கள்.

சிறுமிகள் அனைவரும் அக்கத்தோலிக்க மடத்தில் படித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் மதகுரு இறந்து போய்விட்டார். அவர்களுக்கு காவலாக அம்மதகுருவால் தத்தெடுக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இருக்கிறான். வண்டியில் தப்பி ஓடி வந்த பெண்கள் அனைவரும் விபச்சாரிகளாக வாழ்பவர்கள். அந்த அமெரிக்கன் இறந்தவர் களுக்கு இறுதி சடங்கு செய்பவன். இறந்து போன அம்மடத்து குருவிற்கு இறுதி சடங்கு செய்யவே அவன் இங்கே வருகிறான். அவர்கள் அனைவருக்கும் இப்போது அம்மடம் மட்டும்தான் ஒரே பாதுகாப்பான இடம்.

சிறுமிகளுக்கு அலங்காரமாக இருக்கும் விபச்சாரிகளைக் கண்டால் பிடிக்கவில்லை. தங்கள் இடத்தில் அப்பெண்கள் இருப்பதை வெறுக்கிறார்கள். தங்கள் உடமை களையும் குளியல் அறை, சமையல் அறை போன்றவற்றை அவர்கள் பயன்படுத்து வதையும் கண்டு வெறுப்படைகிறார்கள். அதை தடுக்கவும் முனைகிறார்கள். அதனால் அவர்களிடையே சண்டை வருகிறது. அப்பெண்களுக்கும் இச்சிறுமிகளைப் பிடிக்க வில்லை. வெளியே ஜப்பானியர்கள் இருப்பதனால் பொருத்துக்கொள்ள வேண்டியதா கிறது. அமெரிக்கனுக்கோ தான் எப்படியாவது தப்பி போகவேண்டும் என்பதே குறிக்கோள். இந்நிலையில் ஜப்பானிய படைப்பிரிவொன்று மடத்திற்குள் நுழைகிறது. விபச்சாரிகள் அடித்தளத்தில் மறைந்துக் கொள்கிறார்கள். சிறுமிகள் ஜப்பானியர் களிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். ஜப்பானியர்களால் சூழப்படும் அவர்களைக் காக்க, அமெரிக்கன்தான் இம்மடத்தின் பாதரியார் என்று பொய் சொல்லுவதோடு இவர்கள் இங்கே படிக்கும் சிறு பிள்ளைகள் எனவும் அவர்களுக்கு எவ்வித கெடுதலும் வருவதை தான் அனுமதிக்க முடியாது என்றும் சொல்லுகிறான். அங்கே இருந்த பாதரியாரின் அங்கியை அணிந்துக்கொண்டு அவ்வாறு அவர்களை நம்பச் செய்கிறான். அதை நம்பிய ஜப்பானிய அதிகாரி அம்மடத்தைச் சுற்றி காவல் வைப்பதாகவும் அவர்களுக்கு எவ்வித கெடுதலும் வராது என்றும் உறுதி தருகிறார். ஆனாலும் அக்காவல் இவர்களுக்கான பாதுகாப்பிற்கல்ல என்பதும் அது இவர்கள் தப்பி ஓடி விடாதபடி உறுதி செய்யத்தான் என்பதையும் இவர்கள் புரிந்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்கன் தான் எப்படியாவது தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். விபச்சாரிகளின் தலைவியாக இருக்கும் பெண் அவனிடம், தங்களையும் உடன் அழைத்துச் செல்லும் படி சொல்லுகிறாள். அப்படிச் செய்தால் அதற்கு தக்க பலன் அவனுக்கு கிடைக்கும் என்றும் ஆசை காட்டுகிறாள். சிறுமிகளையும் அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை வருகிறது. ஆனால் எப்படி? இக்காவலை மீறி எப்படி தப்பிச் செல்வது? அமெரிக்கன் அங்கே இருக்கும் ஒரு பழுதடைந்த வண்டியை சரி செய்து அதில் தப்ப முடிவெடுக்கிறான். ஆனால் அதற்கு பல கருவிகள் வேண்டும். அப்போதுதான் அவ்வண்டியை ஓடச் செய்ய முடியும். அதற்கு என்ன செய்வது? அவர்களுக்கு ஒரு வழி பிறக்கிறது. அம்மடத்தில் அடைந்து கிடக்கும் ஒரு சிறுமியின் தந்தை ஜப்பானியர்களோடு நட்பாக இருக்கிறார்.

அவர் எப்படியாவது தன் மகளை இந்நகரத்திலிருந்து மீட்டு கொண்டு சென்று விடவேண்டும் என முயல்கிறார். அவரின் மூலம் வண்டிக்கு தேவையானப் பாகங்கள் கிடைக்கிறது. சிறிது சிறிதாக, காவலர்களின் கண்ணில் படாமல் அவ்வண்டியை அமெரிக்கன் சரி செய்கிறான். ஒரு நாள் வண்டி தயாராகி விடுகிறது. இந்நிலையில் திடிரென ஜப்பானிய அதிகாரி அம்மடத்திற்கு வருகிறார். அவரை மகிழ்விக்க சிறுமிகள் அனைவரும் சேர்ந்து பாடல் பாடுகிறார்கள். அப்பாட்டில் மகிழ்ந்த அவ்வதிகாரி, அவர்கள் அனைவரும் அடுத்த நாள் நடக்கவிருக்கும் ஜப்பானிய வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் உயர் அதிகார்களை பாடி மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். இதை அமெரிக்கன் மறுக்க. அவர் அதை ஒரு கட்டளையாக பிரபித்துவிட்டு செல்லுகிறார்.

நகரம் முழுவதும் சூறையாடப்படும் இந்நிலையில், ஜப்பானிய கூடாரத்திற்கு செல்லு வது தற்கொலைக்கு சமம் என்பதை அவர்கள் அறிவார்கள். மேலும் சிறுமிகளை அவர்கள் அழைப்பது பாடுவதற்காக அல்ல என்பதும் அங்கே சிறுமிகள் சென்றால் என்ன கொடுரம் நிகழும் என்பதும் அனைவரும் அறிந்திருந்தனர். இச்சிறுமிகள் மொத்தம் பனிரெண்டுபேர், ஆனால் தவறுதலாக விபச்சாரி ஒருவளையும் சேர்ந்து பதிமூன்று பேர்கள் என இராணுவ அதிகாரி கணக்கிட்டுச் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் அடுத்தநாள் கண்டிப்பாக விருந்துக்கு வர வேண்டும் என கட்டளை இடப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டிலிருந்து எப்படி விடுபடுவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அனைவரும் பெரும் துயரத்தில் ஆழ்கிறார்கள். சிறுமிகள் அழத்துவங்குகிறார்கள். விபச்சாரிகளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தவறுதலாக சிறுமி களோடு கணக்கிடப்பட்ட விபச்சாரப் பெண் அழுதுக் கொண்டே இருக்கிறாள். மரணம் போல வரும் மறுநாளை எப்படி எதிர்கொள்வது என்ற பெரும் கேள்வோடு அவரவர் அறைகளுக்குத் திரும்புகிறார்கள். அன்றைய இரவு மொத்த சிறுமிகளும் ஒரு முடி வெடுக்கிறார்கள். அது மடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வது. நெஞ்சை பதர வைக்கும் இம்முடிவும், அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் நாம் கற்பனை செய்ய முடியாதது. .அதைப் படத்தில் பாருங்கள். பனிரெண்டு விபச்சாரிகள், பனிரெண்டு சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் ஒரு அமெரிக்கன். இவர்களை வைத்து நாம் வாழ்வில் கடந்து வரவே முடியாத ஒரு தியாகத்தை நிகழ்த்தி காட்டுகிறார் இயக்குனர். இப்படம் மிக அற்புதமான, நெகிழ்வான பல கணங்களைக் கொண்டது.

தேசம், அரசு, அரசியல், போர், வன்மம், படுகொலைகள் எல்லாம் தாண்டி இன்னமும் இந்த மனிதயினம் பிழைத்திருப்பது எப்படி என்பது விடை தெரியா கேள்விதான்.

ஆயினும், மனித வரலாறு அற்புதமான பல கணங்களையும் மறக்க முடியாத பெரும் தியாகங்கள் கொண்டது. இம்மனித கூட்டம் இப்பூமி பந்தில் வாழ்ந்து கிடப்பதற்கு அர்த்தம் இருப்பின், அது இம்மாதிரியான தியாகங்களுக்காக மட்டுமே இருக்க முடியும் என்ற எண்ணத்தை இப்படம் ஏற்படுத்துகிறது.

Pin It