ஈழத் தமிழினத்தின் மீது சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப் படவேண்டும்; இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தனி ஈழம் குறித்து தமிழ் மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து, கடந்த ஏப்ரல் 2013 முழுவதும் தமிழக மாணவர்கள் போராடியதன் விளைவாக, தமிழக சட்டமன்றம் இது குறித்துத் தீர்மானம் ஒன்றை இயற்றியது. “இலங்கையை இந்தியா நட்பு நாடாகக் கருதக் கூடாது; இனப் படுகொலை மற்றும் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; ஈழத்தமிழ் மக்களிடம் தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; இலங்கையின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; கொழும்பில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது” போன்றவை அத்தீர்மானத்தின் கூறுகளாகும். இத்தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் தமிழகத்தின் ஒட்டு மொத்தக் குரலாகக் கருதப்பட்டது. ஆனால், இத்தீர்மானம் சி.பி.எம் கட்சிக்கு கசக்கிறது. மார்க்சிஸ்ட் ஜி.இராம கிருட்டினன் தீர்மானத்திற்கும் தமிழர்களின் ஏக்கம் நிறைந்த எதிர்ப்பார்ப்பிற்கும் முரணான கருத்துக்களை தீக்கதிர், செம்மலர், (மே 2013) ஆகிய இதழ்களில் பதிவு செய்திருக்கிறார்:

“தனி ஈழம் என்னும் கோரிக்கையின் பின்னால் எல்லோரும் இருப்பதாகச் சொல்வதும் சரியல்ல” என்கிறார். “தனிநாடு கேட்டால் நல்லதை விடத் தீங்குதான் தமிழர்களுக்கு வந்து சேரும் என்பதுதான் தொடர்ந்து எமது புரிதலாகவும் நிலைப்பாடாகவும் இருக்கிறது’’ என்கிறார்.

ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகளின் முழுகட்டுப்பாட்டில், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள், யாழ் மாவட்டத்தின் ஒரு பகுதி, வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதி, மன்னார் மாவட்டத்தில் வடகிழக்கு மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பகுதி நிலப்பரப்புகளை உள்ளடக்கி ஒரு சுதந்திரமான தமிழீழம், முப்படைகளோடும், பல்வேறு நிர்வாகத்துறைகளோடும் செயல்பட்டு வந்தது.

தமிழீழக் கல்விக் கழகம், தமிழீழ ஊரக வளர்ச்சிப் பணி, தமிழீழ நிர்வாக சபை, தமிழீழ பொருண்மியத் துறை, தமிழீழ சுகாதாரத் சேவை, தியாகி திலீபன் மருத்துவ இயக்கம், தமிழீழ வனவளப் பாதுகாப்பு, தமிழீழ விளையாட்டுத் துறை தமிழீழ மாவீரர் போராளிகள் குடும்ப நலன், தமிழீழ அரசியல் துறை, மகளிர் பிரிவு, தமிழீழ வெளியீட்டுத் துறை, புலிகளின் குரல் என்ற வானொலி, தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு தமிழீழத் திட்டமிடல் அபிவிருத்தி செயலகம், சமாதானச் செயலகம், போன்ற 15 பிரிவுகளைக் கொண்டு தமிழீழ அரசியல் துறை ஈழ தேசத்தை நிர்வாகம் செய்தது. ஈழத்தமிழ்மக்கள் தாங்கள் பத்திரமாக இருப்பதை உணர்ந்தனர். முப்படைகள் தமிழரைப் பாதுகாத்தன. ஈழத்தமிழர் எதிர்பார்த்தெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தங்கள் தனிஅரசுக்கான “ஏற்பளிப்பு” என்பதுதான். உலக நாடுகள் தமிழீழ அரசை அங்கீகரித்திருந்தாலே போதும். ஆனால், எந்த தேசிய இனத்தின் விடுதலையையும் ஏற்கும் உளநிலை அற்ற இந்திய ஏகாதிபத்தி யமும், இந்திய ஒருமைப்பாடு என்னும் பெயரில் ஆரிய மேலாண்மைக்குக் கீழ் இத்துணைக் கண்டத்தையே கட்டிப்போடும் “ஏக இந்தியவாதி’களான சி.பி.எம். காங்கிரசு போன்ற கட்சிகளும் தனி ஈழத்துக்கு எதிரான ஒரு பிரச்சாரப் போரைத் தொடர்ந்து நடத்தின.

புலிகள் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, இன்று ஈழம் என்பது சிங்களர்களின் “போக பூமி” ஆக மாற்றப்பட்டிருக்கிறது. இரத்தமும், கண்ணீருமாக, எஞ்சிய தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந் நிலைக்கு இந்திய ஏகாதிபத்திய அரசு மட்டுமல்ல, இந்தியம் என்ற ஆரியத்தை தன் உள்ளீடாகக் கொண்டிருக்கக் கூடிய சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளும் முக்கியக் காரணம். புலிகள் பலமாக இருந்த போது, தமிழ்ப் பெண்களும், பொதுமக்களும் பாதுகாப்பாகவே இருந்தார்கள். இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளே பொறுப் பாளிகள்.

சிங்கள இனவெறி அரசின் முகவர்களாகவே சி.பி,எம் கட்சி செயல்படுவது தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

கூடுதலான கோளாறுமிக்கக் கருத்தையும் ஜி.இராமகிருட்டிணன் பதிவு செய்கிறார். ஈழத்தில் நடந்து முடிந்துள்ளது “இனப் படுகொலை’’ அல்ல என்ற கருத்தை இப்படி பதிவு செய்கிறார்.

“முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் அது இனப்படுகொலைதான் என்கிற உணர்வு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் என்ன புரிதல் இருக்கிற தெனில் ஆயுதமற்ற மக்களின் மீது ஆயுதத் தாக்குதல் தொடுத்து அழிப்பது இனப்படுகொலை என்கிறார்கள். இங்கே ஆயுதபாணிகளான இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் அப்பாவித் தமிழர்கள் இரு தரப்பாலும் கொல்லப்பட்டுள்ளனர் என்றே ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த மூவர் குழு குறிப்பிடுகிறது. ஆகவே மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் கடுமையான அளவுக்கு நடந்துள்ள போர் என்று கணிக்கிறார்கள். இனப்படுகொலை என்று குறிக்கவில்லை”

2010 இல் ஐ.நா.வால் நியமிக் கப்பட்ட மர்சூகிதருஸ்மன் தலைமையிலான மூவர் குழு இலங்கையில் உலக மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதையும், போர்க்குற்றங்கள் நடைபெற்றதையும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடுகிறது. இருதரப்பினரும் அத்துமீறல்கள் செய்துள்ளதாகக் கருதிய இக்குழு “மனிதநேய மற்றும் மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையில் புரிந்துள்ள அத்துமீறல்கள் குறித்து உடனடி யாக நேர்மையான விசாரணைகளைத் தொடங்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட விசாரணை சுதந்திரமான சர்வதேச விசாரணையாகவே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட விசாரணையில்தான் போரின் தன்மை குறித்தும் பேசப்படும். நடைபெற்றது இனப்படுகொலையா அல்லது போர்க்குற்றங்கள்தாமா என்பது தெளிவாகும்.

நடைபெற்ற குற்றங்களை விவரிக்கும் போது மூவர் குழு இவ்வாறு குறிப்பிடுகிறது:

“தகுதிவாய்ந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட இந்தவகையான மனிதத்திற்கு எதிரான குற்றங்கள், வன்னியில் இருந்த தமிழ் மக்களுக்கு எதிராக இனம் மற்றும் அரசியல் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவே தெரிகிறது”

ஆகவே, ஐ.நா. வின் மூவர் குழுவும் அது இனப்படுகொலை அல்ல என்று கூறிவிடவில்லை. பாதிக்கப்பட்டு நைந்து கிடக்கும் ஈழத் தமிழ்மக்களுக்குத் தாமதமானலும் நீதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழகமும் உலக மாந்தநேயர்களும் உரத்துக் குரல் கொடுக்கும் இந்நேரத்தில், இனப்படுகொலைக் குற்றச்சாட்டிலிருந்து இராசபக்சேவை விடுவிக்க முயலும் சி.பி.எம். இன் சிங்களபாசத்தை தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

ஈழப் பிரச்சினையை ஆய்வு செய்து வரும் உலகளாவிய புகழ் படைத்த பல அறிஞர்கள் நிகழ்ந்தவற்றை முன்னமே “இனப் படுகொலை” என்று அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றைக் காண மறுத்துக் கண்ணை ஏன் இவர்கள் மூடிக் கொள்கிறார்கள்? ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலைதான்; போர்குற்றங்களும் நிகழ்ந்தன்; மனித உரிமை மீறல்கள் பெருமளவில் நடந்தேறின.

புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையிலான போரில் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை. வான்வழித்தாக்குதல்களிலும், எறிகணைத் தாக்குதல்களிலும்தான் மக்கள் கொல்லப்பட்டார்கள். இரசாயன ஆயுதங்களையும், உயிர் வாயுவை உறிஞ்சி விடக்கூடிய குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்திதான் இலங்கை இராணுவமும் வான்படையும் கொன்றன என்பதை இதுவரை வெளிவந்துள்ள சான்றுகளைப் பார்வையிட்டு உறுதியாகக் கூற முடியும்.

நடந்தவை “இனப்படுகொலை” இல்லை என்றால், இனப்படு கொலைக்கான வரையறைதான் என்ன? இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஐ.நா. அவையின் முன்னெடுப்பில் “இனப்படு கொலையைத் தடுத்தலும், தண்டித் தலுக்குமான ஒப்பந்தம்      (The Convention on the Prevention and Punishment of the prevention and Punishment of the Crime of Genocide - UHCG) உருவாக்கப்பட்டது. இது இனப்படுகொலையை இவ்வாறு வரை யறுத்தது.

“... the intenrtion to destory, in whole or in parta national, ethical, racial or religious group, as such" (ஒரு தேசிய இனம், குடி வழியினம், மரபினம் அல்லது சமயம் சார்ந்த குழு போன்றவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்க எண்ணுவது)

சர்வதேச அளவில் கொடுங் குற்றமாகக் கருதப்படும் இனப்படு கொலைக்காக எந்த உயர் அதிகாரத்தில் இருப்பவராயினும் பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்தால் (International Cirimnal Court - ICC) விசாரணை நடத்தி தண்டிக்க முடியும் ICC சட்ட வரையறையிம் சரத்து-6 இன்படி, கீழ்காணும் செயல்களை, ஒரு தேசிய இனத் தையோ, குடிவழி இனத்தையோ, மரபினத்தையோ, சமய குழுவையோ, முழுமையாகவோ, பகுதியாகவோ அழிக்க நினைத்தால், அது இனப்படுகொலை ஆகும்.

1.    ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்லுதல் (Killing Members of the Group)

2.    குழு உறுப்பினர்களுக்கு உடலளவில் அல்லது உள்ளத் தளவில் மோசமான தீங்கை விளை வித்தல். (Cousing Serious bodily or mental harm to members of the group)

3.    முழுமையாகவோ பகுதியாகவோ அழியும்படி வாழ்வியல் சூழலை திட்டமிட்டு வேண்டுமென்றே திணிப்பது (deliberately inflicting on the group conditions of life calculated to bring alount its physical destruction in whole or in part)

4.    ஒரு குழுவில் குழந்தை பிறப்பைத் தடை செய்யும் நோக்குடன் நடவடிக்கைகளை விதித்தல் (imposing weasures intented or to pervent births within the groups)

5.    ஒரு குழுவைச் சேர்ந்த குழந்தைகளை மற்றொரு குழுவிற்கு கட்டாயமாக மாற்றுவது (forcibly transferring children to the group to another group)

இவை அனைத்தும் சிங்களர்களால் தமிழர்கள் மீது 2009 ஆம் ஆண்டு போருக்கு முன்னும் நடைமுறைப்படுத்தப்பட்டன; போருக்குப்பின் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இச்சட்டத்தில் “முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ” எனக் குறிப்பிடபட்டிருப்பதில், “பகுதியாகவோ’’ என்பதற்குப் பொருள் “பதிப்பிற்கு உள்ளாவோர் எவ்வளவு சிறிய எண்ணிக்கையாகவும் இருக்கலாம் என்பது ஆகும்.

இச்சட்டப்படி, ஓரினத்தை கட்டாயமாக இடம் பெயரச்செய்வதும் குற்றமாகும். இனப்படுகொலை (Genocide) என்பதில், கொல்லுவது என்பது மட்டுமில்லை பிற வழிமுறைகளும் உள்ளடங்கும்.

“உடலளவில் மற்றும் உள்ளத்தளவில் தீங்கு விளைவிப்பது என்பதில் சித்திரவதை, பாலியல் வல்லுறவு, பாலின அடிமைத்தனம், மனிதத்தன்மையற்ற, இழிவுபடுத்தும் நடவடிக்கைகள், காணாமல் போகச் செய்வது, ஆகியன அடங்கும்.

 ‘அழிவைத்தரும் வாழ்வியல்சூழல்’ என்பதில், உயிர் வாழ்வதற்கான உணவு, மருத்துவ சேவை ஆகியவை கிடைக்காமற் செய்தல் வாழ்விடத்திலிருந்து திட்டமிட்டு வெளியேற்றுவது ஆகியவை அடங்கும்.

 2009 போரின் போது, தமிழர்கள் பெருவாரியாக குண்டுவீசிக் கொள்ளப்பட்டார்கள். பின்னர் ஆண்கள் பிரித்தெடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இன்று ஆண்கள் அற்றுப்போன, பெண்களும் குழந்தைகளும் மட்டுமே உள்ள சமுதாயமாக தமிழினம் மாற்றப் பட்டிருக்கிறது. இது இனப்படுகொலைக்கான நேரடி அடையாளம் அல்லவா? உளவியல் பாதிப்புக்கு உள்ளான தமிழ்ப்பெண்கள் தற்கொலையை நாடுகின்றனர்; பெண்கள் அதிக எண்ணிக்கையில் நடைபிணங்களா இருக்கின்றனர். தமிழ்க் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, உளவியல் ரீதியில் ஊனப்படுத்தப் பட்டுள்ளனர். பெண்களுக்கு கட்டாய கருச்சிதைவு செய்யப்பட்டது. கட்டாய பாலியல்வல்லுறவு மூலம் கலப்பினம் ஒன்றை உருவாக்கி தமிழ்இன அடையாளத்தை ஒழித்துக்கட்ட இலங்கை அரசு முற்பட்டது. ஆகவே ஈழத்தில் நடத்தப்பட்டது இனப்படுகொலை என்ற வரையறைக்குள் அடங்கும்.

இந்த பட்டியலில் காட்டப்பட்டவை அனைத்தும் ஈழத்தில் திட்டமிட்டபடி மிகக்கொடூரமாக 1958 முதல் படிப்படியாக நடைமுறைபடுத்தப்பட்டன. எந்த அளவு கோலின்படி பார்த்தாலும் ஈழத்தில் நடைபெற்றவை இனப்படுகொலையே ஆகும்.

ரபேல்லெம்கின் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இனப்படுகொலை என்பதன் மூலம் ஒரு குடிவழி இனம் அழிக்கப்படுவதை குறிக்கிறோம்.. பொதுவாக, இனப்படுகொலை என்பதற்கு, ஒரு தேசிய இனம் உடனடியாகக் கொல்லப்படுவது என்று பொருள் இல்லை. ஒரு தேசிய இனத்தின் வாழ்வின் அடித்தளங்களை, ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகள் மூலம் அழிக்க முற்படுவது. இறுதியில் அவ்வினம் முற்றிலுமாக அழிக்கப்படுவது. அத்திட்டமிடலில் குறிக்கோள்களாவன தேசிய இனத்தின் (National Groups) அரசியல், சமூக நிறுவனங்களை சிதறடிப்பது; பண்பாடு, மொழி, தேசஉணர்வு, சமயம், பொருளாதார இருப்பு மற்றும் தன்சுயபாதுகாப்பு, சுதந்திரம் உடல்நலம், சுயமரியாதை அனைத்துக்கும் மேலாக உயிர் அனைத்தையும் அழிப்பது:

ஈழத்தில் இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு இனஅழிப்புக்கு சிறந்த உதாரணமாகக் காட்டும் வகையில் நடத்தப்பட்டது.

தெற்கு ஆசியாவிலேயே அதிக காலம் நடந்த போர் என்பது இலங்கை சிங்களப் பேரினவாதிகளின் இனப்படுகொலையை எதிர்த்து தமிழர்கள் நடத்திய போர்தான் கடந்த 60 ஆண்டு களாக இனப்படுகொலையை எதிர்த்துத் தமிழினம் போராடிக் கொண்டிருகிறது. 30 ஆண்டுகள் அமைதி வழியிலும், 30 ஆண்டுகள் ஆயுதம் தாங்கியும் ஈழத் தமிழர்கள் போராடினார்கள்.

1956 ஜூன் மாதம் “சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டம் வந்த போது, அதை அமைதி வழியில் எதிர்த்த தமிழர்கள் 150 பேர் கொல்லப்பட்டனர். 1958 இல் 300 பேர் கொல்லப் பட்டனர் தமிழ்க் குழந்தைகளைக் கொதிக்கும் தாரில் முழுக்கித் தூக்கிப் போட்டார்கள் சிங்களக் காடையர்கள். 1983 இல் உள்ளு ராட்சித் தேர்தலை 98 விழுக்காடுத் தமிழர் புறக்கணித்தனர் அந்த ஆண்டு 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர், 10,000 கோடிரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அழிக்கப்பட்டன.

குழந்தைகளைக் கூட சிங்களர் விட்டு வைக்கவில்லை. நெடுந்தீவு மக்கள் யாழ்ப்பாணம் சென்று வரக் குமுதினி படகுச் சேவை இருந்தது. 1985 ஆம் ஆண்டு மே 15 அன்று சிங்களக் கடற்படை இப்படகை சூழ்ந்து கொண்டு மூன்றுமாதக் குழந்தை முதற் கொண்டு 36 பேரை வெட்டிக் கொன்றது. தமிழர்களைக் கொல்லுவது என்பது ஒரு தொடர் நிகழ்வு.

போர் நடைபெறாத காலத்திலேயே இனப்படுகொலையை சிங்கள அரசு நடைமுறைபடுத்தியது. போர் உச்சநிலையை அடைந்த போது “பாதுகாப்பு வளையம்” என்றும் போரற்ற பகுதி” என்றும் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் தமிழர்களை அழைத்துச் சென்று எறிகணைகளை வீசி பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்தது.

போருக்கு முன், 2008 டிசம்பர் முதல் 2009 மே 2 ஆம் தேதி வரை 5 மாதங்களில் 12 மருத்துவ மனைகள் மீது 30 முறை போர்இலக்காகக் குண்டு வீசி அழிக்கப்பட்டன.தமிழர்களுக்கு மருத்து உதவி கிடைக்கக்கூடாது என்பதற்காக இது தெரிந்தே செய்யப்பட்டது. இது இனப்படுகொலை என்பதற்கான அடையாளம்.

போரின் போது இலங்கை இராணுவம் புலிகளுடன் போர் நடத்தவில்லை. பெருவாரியாக இரசாயனக்குண்டுகளைக் கொட்டி ஒட்டுமொத்தத் தமிழர்களும் எரியூட்டப்பட்டனர். விமானத்திலிருந்து 4.5 இலட்சம் கிலோ குண்டுகளைப் போடுள்ளதாக சிங்கள அமைச்சர் ஒருவர் அறிவித்தார். பதுங்கு குழிகளில் இருந்த பள்ளிச்சிறார்கள் அப்படி அப்படியே புதையுண்டு போனார்கள்.

இவையெல்லாம், ஏதோ போரின் போது நடந்துவிட்டதாகக் கருதக் கூடாது. இத்தாக்குதல்களுக்குப் பின்னே தமிழினத்தையே துடைத்தொழிப்பது என்ற திட்டம் இருந்தது. இராசபக்சே கூறினார், இனி இலங்கையில் தமிழர்கள் இலங்கையராக மாற வேண்டும் என்று. இது தமிழர்களின் அடையாளத்தைத் துடைத்தெறிகிறவேலை.

போருக்குப் பின் 90,000 விதவைகள் ஆதரவின்றி பாதுகாப் பின்றி அச்சத்தில் வாழ்கின்றனர். 2,30,000 சிங்கள இராணுவ சிப்பாய்களை தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு நிறுத்தி வைத்தது. பாலியல் வல்லுறவை தமிழர் மீதான ஒரு போர் முறையாக இலங்கை இராணுவம் கைகொண் டது சிறுமிகளைக் கர்ப்பினிகளாக்குவது என்ற திட்டத்தை இலங்கை அரசு அறிவிக்காமல் வக்கிரமத்துடன் செயல்படுத்துகிறது. இன்று ஈழத்தமிழினம் இலங்கை இராணுவத்தின் கருணையில் வாழ்கிறது. தற்காத்துக் கொள்ள இயலாத பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

“Structural Genocide” எனப்படும் “கட்டமைப்பு இனப்படுகொலையும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. தமிழின அடையாளங்களை சிதைப்பது, “சிங்களமயமாக்குவது” ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2500 இந்துக் கோயில்கள், 400 கிறித்துவதேவாலயங்கள் இடிக்கப்பட்டு, அங்கெல்லாம் 4500 புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வீதிகளுக்கெல்லாம் சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. சிங்களர்கள் பெருவாரியாகக் குடியேற்றப்படுகின்றனர்.

இனி, தமிழர்களின் தாயகப் பகுதி என்று தனியே கிடையாது இதுவரை தேசிய இனமாக வாழ்ந்த தமிழினம் இனி தன் தாயகப் பகுதியிலும் நிரந்தர சிறுபான்மையினமாக, சிங்களப் பெரும்பான்மையிடம் நிலப்பகுதிகளை இழந்து அஞ்சி ஒடுங்கி வாழ வேண்டும்.இவையெல்லாம் சர்வதேச குற்றவியல் சட்டவரையறைப்படி இனப்படுகொலைதான்.

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழர்களுக்கு மீள் குடியேற்றம் கூட நடத்தப்படவில்லை. வாழ்வியல் சூழல்களை இழந்து ஏது மற்றவர்களாயிருக்கிறார்கள் இதுவும் இனப்படுகொலையின் இலக்கண வரம்புக்குள் வருகிறது.

ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள் ளார்கள். டாக்டர் எலன்சாண்டர், சுனாமியில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ வந்தவர். பின்னர் ஈழத் தமிழர் பிரச்சினையை அறிந்து கொண்டு ஈழத்தில் நடை பெற்றது இனப்படுகொலை என்பதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். (2010)

“இனவெறி அரசிற்கெதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். தென்னாப்பி ரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான அரசின் இனவெறியை எதிர்த்து சர்வதேச நாடுகள் அணி திரண்டு அந்நாட்டைத் தனிமைப்படுத்தி அடிபணிய வைத்தது போல, கொடிய நாடுகளை ஒத்த இலங்கை அரசையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலம் மண்டியிடச் செய்ய முடியும்”.

பேராசிரியர் பிரான்சிஸ்பாய்ல் (Francis A. Boyle) என்ற பன்னாட்டுச் சட்ட வல்லுனர் “ஆம்னஸ்டி இண்டர் நேஷனல்’’ அமைப்பில் பொறுப்பு வகித்தவர். அவர் ஆய்வு செய்து “The Tamil Genocide by SriLanka” என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். “தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலையில் இந்தியாவுக்கும் பங்கிருக்கிறது. இது, இனப்படுகொலைக்கு எதிரான 1948 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ரத்து iii (e) படி, குற்றம் என்று கூறுகிறார்.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ளவர்களுக்குப் புரியும் ஒரு விடயம், இங்கிருக்கும் மார்க்சியர்களுக்கு எப்படி புரியாமல் போனது?

இலங்கையின் இனப்பிரச்சினையின் அடிப்படையே சிங்கள இனவெறிதான். “இலங்கை என்பதே சிங்கள இனத்துக்கு மட்டுமே உரியது; சிங்கள மொழிக்கு மட்டுமே உரியது; பௌத்த மதத்துக்கு மட்டுமே உரியது. தமிழர்களை வேரறுப்பது, விரட்டுவது அல்லது அழித்தொழிப்பது சிங்களர்களின் சமயக் கடமை என்று சிங்கள மக்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை தமிழர்கள் அந்நியர்கள். இலங்கையிலிருந்து விரட்டி யடிக்கப்பட வேண்டியவர்கள். இந்த இனவெறி தத்துவ மகாவம்சம் என்ற புத்தநூல் வழங்கியிருக்கிறது. இதுவே பள்ளிக் கூடப்பாடநூல்களிலும் வைத்து இன்று வரை போதிக்கப்பட்டிருகிறது. அனகாரிகா தர்மபால (1864-1933 ஊட்டிய சிங்கள தேசியவாதத்தின் சாரம் இதுதான்.

ஆரியர் வருகையும் சிங்கள ஆரிய இனஉறவும் பற்றிய பாடங்கள் தமிழர்களை சிங்கள மக்களுக்கு எதிரிகளாகவும் இந்தியர்களை இனஉறவுக்காரர்களாகவும் உணர வைத்திருக்கிறது தமிழர்கள் பூர்வகுடியினர் என்பதையும், அவர்களுக்கு இலங்கையின் வடக்கேயும், கிழக்கேயும் ஒரு தாயகம் உண்டு என்பதையும், இன்றுவரை சிங்களர்கள் நம்ப வில்லை; ஏற்கவில்லை. கற்றறிந்த அறிஞர்களும், அறிவார்ந்த பத்திரிகையாளர்களும் இதற்கு விதிவிலக்கு பல வரலாற்றாசிரியர்களும் கூட மகாவம்சத்தையே வரலாறாகக் கருதுகிறார்கள்.

இலங்கை இனப்பிரச்சினையின் வேர் இதுதான் ஒட்டுமொத்த இலங்கையும் சிங்களர்க்கே, மொத்த நிலப்பகுதியும் சிங்கள மொழிக்கே, இலங்கையின் அனைத்து மக்களுக்குமான சமயம் பௌத்தமே’’ என்ற தத்துவம்தான் சிங்களர்களுக்கான அரசியல் வழிகாட்டி. “ஜெர்மனி ஜெர்மானியருக்கு மட்டுமே என்று கருதிய ஹிட்லருக்கும், இலங்கை சிங்களருக்கு மட்டுமே என்று கூறும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

ஹிட்லரை பாசிஸ்ட் என்று அடையாளம் காண முடிகிற மார்க்சிஸ்ட்டுகளுக்கு, இராசபக்சேவை ஒரு பாசிஸ்ட் என்று ஏன் அடையாளம் காண முடிய வில்லை? இராசபக்சேவை ஒரு பாசிஸ்ட் என்று புரிந்து கொள்ளக் கூட முடியாத ஒருவர் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும்?

ஈழத்தில் நடைபெற்றது “இனப்படுகொலை’’ என்று சொல்லாமல், “ஆயுதமோதல்” என்றும் அதில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் மூடிமறைத்து பேச வைக்கும் சி.பி.எம் இன் அந்த சிங்களப் பாசம் எங்கிருந்து வந்தது?

சி.பி.எம். தலைமையின்வாய் மார்க்சியம் பேசினாலும் உள்ளத்தில் உறைந்து கிடப்பது ஆரிய இன உணர்வுதான் அது தமிழர்களை மாற்றாராகவும் சிங்கள- ஆரிய இனத்தைத் தன் உறவாகவும் பார்க்கச் செய்கிறது. இலங்கை தூதர் கரியவாசம் சிங்களர்களாகிய தாங்கள் ஆரிய இனத்தவர் என்று இந்தியத் தலைவர்களிடம் உறவு கொண்டாடினாரோ, அதே ஆரிய இன உணர்வு இந்திய தலைவர்களிடமும் செழித்துக் கிடக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மனமகிழ்ச்சியோடு ஈழப்பகுதியின் மலசலக் குழிகளை எல்லாம் திறந்து பார்க்கலாம் செம்மணிப் புதை குழிகளைப் போலவே, மலசலக் குழிகளிலெல்லாம் இனப்படுகொலைக்கு இலக்கான தமிழர்களின் மண்டையோடுகள். காணமல் போனத் தமிழர்களெல்லாம் எலும்புக் கூடுகளாக வந்து, “நடந்தது இனப்படுகொலை’’ என்று கட்டியம் கூறுகின்றன. இதற்கு மார்க்சியர்கள் என்ன கூற போகிறார்கள்? நடந்தது “இனப்படுகொலை அல்ல’’ என்று இனியும் மார்க்சிஸ்டுகள் பேசினால் மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்;

“மார்க்சியம் நல்ல தத்துவம் தான், ஆனால் இவர்கள் மார்க்சியர்கள் அல்லர்” என்று.

Pin It