இன்று உலகெங்கும் பயன்பாட்டிலுள்ள கணினி மின்னஞ்சல் தொழில்நுட்பத்தை முதன் முதலில் வடிவமைத்தவர், அமெரிக்காவில் வாழும் சிவா அய்யாத்துரை எனும் தமிழரே என்ற செய்தி நம்மில் பலருக்கு வியப்பைத் தரலாம். ஆனால், அதுதான் உண்மை!

1978ஆம் ஆண்டு, 14 அகவை பள்ளி மாணவராக இருந்த சிவா அய்யாத்துரையிடம் காணப்பட்ட, கணினி மென்பொருள் எழுதும் ஆர்வத்தின் காரணமாகப் பிறந்த மின்னணுத் தகவல் தொடர்பு அமைப்பு(EMAIL)தான், இன்று நவீன கால வளர்ச்சிகளை உள்ளடக்கி மின்னணு அஞ்சலாக இன்றைய கணினி உலகில் நிலைபெற்றுள்ளது.

கணினித் தொழில்நுட்பத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கியும், தானே சொந்தமாக பல நிறுவனங்களை இயக்கியும் வந்த சிவா அய்யாத்துரையை, 2009ஆம் ஆண்டு இந்திய அரசு, சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சிக் குழுமத்தின் (Council of Scientific and Industrial research - CSIR) முதல் தலைமை அறிவியலாளராகப் பணியமர்த்தியது. அங்கு, நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து அறிக்கை அனுப்பியதன் காரணமாக, 5 மாதங்களில் அதிலிருந்து நீக்கப்பட்டார். இது குறித்து நேச்சர் இணைய இதழில், ‘கண்டுபிடிப்புகளுக்கு சுதந்திரம் தேவை” என்ற தலைப்பில் அவர் எழுதியக் கட்டுரையைக் கூட நீக்க வேண்டுமெனக் கோரியது இந்திய அரசு.

அந்த சாதனைத் தமிழர், அண்மையில் தமிழகம் வந்திருந்த போது, தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் உரை நிகழ்த்தி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவரது உரையிலிருந்து….

மகிழுந்தில் சக்கரங்கள், இருக்கைகள் என தனித் தனி அமைப்புகள் இருந்தாலும், எப்படி அது ஓரு முழுமையான அமைப்பாக ஒருங்கிணைந்து இயங்குகிறதோ, அதைப் போலவே, எனது அலுவலகத்தில் தாள்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த கடிதம் மற்றும் தகவல் பரிமாற்றத்தை மின்மயமாக்கும் பணியைத்தான் நான் செய்தேன். 1978இல் அவ்வாறு யாரும் செய்யவில்லை. அதை சவாலாக எடுத்துக் கொண்டு, 50,000 வரிகள்(CODE) கொண்ட மென்பொருளை உருவாக்கி, அலுவலகப் பணிகளை ஒர் கூட்டமைப்பில்(NETWORK) இணைத்தேன். அவ்வாறு தான், அந்த அலுவலகத்தில் உலகின் முதல் மின்னஞ்சல் (EMAIL) சேவை பிறந்தது.

1978ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆங்கில அகராதியில் E-MAIL என்ற சொல்லே கிடையாது. 1979ஆம் ஆண்டு தான் முதன்முதலில் அவ்வார்த்தை சேர்க்கப்பட்டது. அதன்பிறகு, எனது மென்பொருளில் நான் பலவற்றையும் சேர்த்து செழுமைப்படுத்திக் கொண்டே வந்தேன். 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் மென்பொருட்களுக்கு காப்புரிமை வாங்குவது தொடர்பான சட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து, 1981ஆம் ஆண்டு எனது மின்னஞ்சல் மென்பொருளுக்கு நான் காப்புரிமை பெற விண்ணப்பித்தேன். 1982ஆம் ஆண்டு காப்புரிமை வழங்கப்பட்டேன். கண்டுபிடிப்புகள் எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சர் சி.வி.இராமன், போஸ் போன்ற நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்கள் இந்தியாவில் உருவானார்கள். 1947ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, அவ்வாறு யாரும் இங்கு உருவாகவில்லை. 1947இல், இங்கு புரட்சிகர மாற்றங்களென எதுவும் நிகழவில்லை, அடிப்படை மாற்றம் கூட நிகழவில்லை. வெறும் அதிகார மாற்றம் தான் நடந்தது.

வெள்ளைக்காரர்கள் கருப்புக் குல்லாய் அணிந்து ஆண்டார்கள். அதன்பின், பிரவுன் மனிதர்கள் வெள்ளைக் குல்லாய் அணிந்து ஆண்டார்கள். 1947க்குப் பிறகும் இங்கு அதே சமூக கட்டமைப்பு தான் நீடிக்கிறது. ஒருவர் முன்னேறுவது, இன்னொருவது பின்தங்குவது என்றுள்ள நிலையில், இங்கு அனைவருக்குமான சமத்துவம் என்பது வரவில்லை.

அமெரிக்காவிலும் புரட்சி நடந்தது. அங்கு நடைபெற்ற புரட்சி, அங்கு ஏற்கெனவே நிலவிய அனைத்துக் கட்டமைப்புகளையும் உடைத்து, மக்களுக்கு மேலும் அதிகளவில் சுதந்திரத்தை வழங்கியது. இங்கும் அதைப் போலவே அனைவருக்கும் சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஒரு 35 ஆண்டுகளாகத்தான் இங்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே தான், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் 6 இந்தியர்களையும், 6 அமெரிக்கர்களையும் கொண்ட ஒரு கண்டுபிடிப்பு மையத்தை நான் உருவாக்கவுள்ளேன். புதிய புதிய சிந்தனைகளை பகிர்ந்து கொண்டு, புதிய முறைகளில் கண்டிபிடிப்புகளை நிகழ்த்த இது பயன்படுமென நினைக்கிறேன்.

இந்தியாவில் சாதி, நிறம், மதம், என்ன உணவு சமைக்கிறோம், ஆண், பெண், மொழி என 10 வகைகளில் பாகுபாடுகள் நிலவுவதாக எனது தாய் சொல்வார். அமெரிக்காவிலும் பாகுபாடுகள் நிச்சயம் இருக்கின்றன. ஆனால், இங்குள்ளதைப் போல் 10 வகைகளில் அது நிலவாது, 3 வகைகளில் நிகழ்கிறது.

ஒரு பிரச்சினை அடையாளம் காணப்பட்டால், அதன் வேரைத் தான் நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். தொழில்நுட்பம், மருத்துவம் என அனைத்துத் துறைகளில் நிலவும் சிக்கல்களுக்கும் இங்கு நாம் வேரைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதை நாம் செய்யாத்தே இங்கு சிக்கல்கள் தொடர்வதற்குக் காரணம்.

20 ஆண்டுகள் நான் இந்திய வரலாற்றைப் படித்தேன். 8ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியர், ஒரு முக்கியமான செய்தியை சொன்னார். பூமியில் நிலவும் சமத்துவம், சொர்க்கத்தில் நிலவும் சமத்துவத்துக்கு சமமானது என்றார். 15 – 16ஆம் நூற்றாண்டுகளில், மத இயக்கமாக அல்லாமல், இங்கு ஆன்மிக இயக்கமாக பக்தி இயக்கம் வளர்ந்த பிறகு தான், சாதிக் கட்டமைப்புகள் உடையத் தொடங்கின. அதன்பின்னர் தான் ஐரோப்பியர்கள் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்தார்கள்.

அமெரிக்காவில் 1960களில் ஹிப்பீஸ் எனப்படும் பழம்பெரும் மருத்துவர்கள் இப்போது மிகவும் வயதானவர்களாக ஆகிவிட்டனர். அவர்கள் தான் யோகா, சித்த மருத்துவம் ஆகியவற்றை ஈர்ப்புடன் அறிந்து கொண்டனர். அவர்களுடைய பழைய மருத்துவ முறைதான் அங்கு ஒவ்வொரு ஆண்டும் 30 விழுக்காடு வளர்ந்து வருகிறது. மூன்றாண்டுகளில் அது 160 பில்லியன் புழங்கும் துறையாக அது வளரப் போகிறது.

ரமண மகரிஷி போன்ற ஆன்மிகத் தலைவர்களை பின்பற்றி இங்கு வரும் ஹிப்பீஸ்கள், இங்கு நிறையத் தெரிந்து கொள்கிறார்கள். மேற்கத்திய மருத்துவ முறையின் சிக்கல்களை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதனால், சித்த மருத்துவத்தின் மீது பெரும் ஆர்வம் கொள்கிறார்கள்.

என்னுடைய கருத்து என்னவெனில், சித்த மருத்துவம் என்னவென்பதை முறையாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகவே நான் சித்த மருத்துவம் குறித்த ஓர் ஆராய்ச்சித் திட்டத்தை உருவாக்கியுள்ளேன். அமெரிக்க மருத்துவர்களுக்கு சித்த மருத்துவத்தை எப்படி பயிற்றுவிக்கலாம் என ஆராயவிருக்கிறேன். அமெரிக்காவில் மேற்கத்திய மருத்துவமுறை மீதான நம்பிக்கை தகர்ந்து வருகிறது. எனவே, அவர்களே இங்கு வந்து கற்றுக் கொள்வார்கள்.

இந்தியாவில், 25 அகவைக்குக் குறைந்தவர்கள் தான் 50 விழுக்காட்டினர் ஆவர். 70 விழுக்காட்டினர் 40 வயதுக்குக் கீழானவர்கள். 600 மில்லியன் 25 அகவைக்குக் கீழானவர்கள். எனவே, மாணவர்கள் தான் இங்கு முக்கிய உந்து சக்தியாக உள்ளனர். அவர்களுக்கு எது சரி எது தப்பென்றுத் தெரிகிறது. அவர்கள் அரசியலிலும் பங்காற்ற வேண்டுமென்பது என் கருத்து. இங்குள்ள அரசியல்வாதிகளின் சராசரி அகவை 70. அதனால் தான், இளையோர்கள் அரசியலில் ஈடுபட வேண்டுமென்கிறேன்.

அதே போல, அவர்கள் தங்கள் உடல்நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். கண்மூடித்தனாக மேற்கத்தியமுறை பின்தொடரக் கூடாது. இப்போது, இந்தியாவில் 300 மில்லியன் மக்களுக்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. மேற்கத்திய பாணியில் டாமினோஸ் பீசா போன்ற நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதால் வரும் பிரச்சினை இது. எனவே நாம் நமது உடல் நலத்தில் அக்கறை செலுத்தவேண்டும். இல்லையெனில், மருத்துவம் சார்ந்த செலவுகள் பெருமளவில் இங்கு கூடிவிடும். மூன்றாவதாக, பெற்றோர்கள் இளையோர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். இளையோர்கள் தவறு செய்வார்கள்தான். எனவே, அவர்களை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும். கண்டுபிடிப்புகளை தவறுகள் மூலம் தான் பெற முடியும். தவறுகளை நீக்கி முன்னேற வேண்டும். கல்லூரி சென்று பயில்வது அடுத்த நிலைக்குச் செல்வது என வெறும் சூத்திரம் போல செயல்படக் கூடாது.

இந்திய இளைஞர்களுக்கு, இந்தயாவின் வரலாற்றை, தமிழ்நாட்டின் வரலாற்றைச் சொல்லித் தர வேண்டும். அது கண்டுபிடிப்புகளின் வரலாறு என்று சொல்லித் தர வேண்டும். அண்மையில், தமிழ்நாட்டில் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் இருந்தது அகழராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நமது இளைஞர்கள் இங்கிருந்து தான் தங்கள் சிந்தனைகளைத் தொடங்க வேண்டும். மேற்கிலிருந்து எதையும் தொடங்கக்கூடாது. நம்முடைய சொந்த வரலாறு பல கண்டுபிடிப்புகளைக் கொண்டுள்ளது. அது தான் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கும்.

(நன்றி : நக்கீரன் இணையதளம்)

Pin It