ஏகாதிபத்திய நாடுகள், ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களைத் திணித்து, இந்தியத் துணைக் கண்டமெங்கும் பல்வேறு தேசிய இனங்களின் தாயகங்களில் தொழிற்சாலைகள் அமைத்து, அதன் கழிவுகளை இங்கேயே கொட்டிக் கொண்டிருக்கின்றன. இது போதாதென்று, அந்நாடுகளில் உருவாகும் குப்பைகளையும் கப்பல்களில் கொண்டு வந்து இந்தியாவெங்கும் கொட்டி விட்டுச் செல்கின்றன.

ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாடுகளில் உற்பத்தியாகும் செயலழிந்த மின்னணு சாதனங்களால் உருவாகும் மின்னணுக் குப்பைகள், அறுவை சிகிச்சைகளால் வெட்டி எடுக்கப்படும் மனித உறுப்புகள், ஊசிகள், காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் எனப் பல்வேறு வகையான குப்பை களை இந்தியா போன்ற ‘வளரும்’ நாடுகளுக்கு கப்பல்களில் அனுப்பி வருவதை நடைமுறையாகக் கொண்டிருக்கின்றன.

இக்குப்பைகளில் உள்ள நச்சுப் பொருட்களை, இதனை மறுசுழற்சி அல்லது புதைக்கும் செயல் களில் ஈடுபடும் மக்களுக்கு நேரடியாகவும், மறை முகமாகவும் உடல்நலக் கேடுகள் உண்டாகின்றன. அவ்வப்போது, இது போன்ற குப்பைகளைக் கொண்டு வரும் மேற்குலக நாடுகளின் கப்பல்கள் பிடிபட்டு இவ்வுண்மை அம்பலப் பட்டிருக்கிறது. இது குறித்து 2007 ஆம் ஆண்டு தமிழர் கண்ணோட்டம் இதழிலும் நாம் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

தற்போது, நம் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் ‘த சண்டே இந்தியன்’ வார இதழில், அவ்விதழின் பொருளியல் செய்தித்துறை ஆசிரியர் பிரசூன் மஜூம்தார், 'கிரின்பீஸ்' தன்னார்வ அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஒரு தலையங்கம் எழுதியுள்ளார். அதிலிருந்து நமக்குத் தெரிய வரும் செய்திகள் இவை:

• 2007ஆம் ஆண்டில் இந்தியாவில், செயலிழந்து குப்பைகளில் வீசப்பட்ட கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கைபேசிகள் உள்ளிட்ட மின்னணுக் குப்பைகளின் அளவு மட்டும் 3,80,000 டன்கள். இது ஆண்டுக்கு 15 விழுக்காடு அதிகரித்து, 2012ஆம் ஆண்டு 8,00,000 டன்களாக உயரும் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது.

• 2008ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்த கப்பல்களில், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய 800 டன் அளவிலான, மருத்துவக் கழிவுப் பொருட்கள், ஊசிகள், ஆணுறைகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் தூத்துக்குடி துறை முகத்திற்கு வந்திறங்கின.

• சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் அமெரிக்காவின் 180 டன் அளவிலான குப்பைகள் கொண்டு வரப்பட்டன. மேலும், 1000 டன் குப்பைகள் தூத்துக்குடி துறைமுகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

• அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமின்றி ஜப்பான் நாடு தடை செய்யப்பட்ட 300 டன் அளவிலான, துத்தநாகத் துகள்கள், கந்தக அமில பேட்டரிக் கழிவுகள், நஞ்சான பி.வி.சி. கழிவுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வேதியியல் கழிவுகளை ஏற்றுமதி செய்கின்றது.

• இது போன்ற 105 நாடுகள் இந்தியாவில் தங்களின் குப்பைகளைக் கொட்டிக் குவித்து வருகின்றன.

• இவ்வாறு கொண்டு வரப்படும் குப்பைகளில், உலக வர்த்தக மையத் தாக்குதலில் எஞ்சியிருந்த குப்பைகள் தொடங்கி அணுமின் நிலையங்களின் டைட்டானியக் கழிவுப் பொருட்கள் வரை பலவும் கலந்து இருக்கின்றன.

Pin It