இனக்குழு சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த மனித இனம், முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கால், இயற்கையின் மீதே படையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வெப்பமயமாதல் முதல் இன்றைக்கு உலகை அச்சத்திற்குள்ளாக்கி இருக்கும் பன்றிக் காய்ச்சல் வரையான அனைத்து நிகழ்வுகளும் முதலாளியத்தின் வழிநடத்தலால் மறைமுகமாகப் பிறப்பெடுத்தவையே.

இராசாயன உணவுமுறையும், இயற்கைக்கு எதிரான வாழ்முறையும் ஏற்படுத்திய கோலங்களாகவே நோய்கள் மனித இனத்தை ஆட்டிப்படைக்கின்றன. எய்ட்ஸ், ஆந்த்ராக்ஸ், பிளேக், சார்ஸ், பறவைக் காய்ச்சல் என பலவிதமான தொற்று நோய்களும் மக்களுக்கு தான் பாதிப்பு. ஆனால், மருந்து முதலாளிகளுக்கு இவை சந்தையை உருவாக்கிய வரங்கள். அந்த வரிசையில் தற்பொழுது ‘பன்றிக் காய்ச்சல்’ நோயும் இடம் பிடித்துள்ளது.

வெறும் 25லிருந்து 60 ரூபாய் வரை மதிப்புள்ள ஒரு முகமூடியை, மக்களுக்கு அச்சமூட்டிய ஊடகங்களின் துணையால், ரூ. 300, ரூ.500 வரை விற்க முடிகின்ற நிலையை இது  ஏற்படுத்தியுள்ளது. ‘பன்றிக்காய்ச்சல்’ எனப்படுகின்ற இந்நோய் அதன் பெயருக்கேற்ப பன்றிகளில் இருந்து பரவும் நோய் அல்ல. இந்நோய்க்குக் காரணமான ‘H1N1‘ என்ற கிருமி பன்றிகளில் இருந்து உருவானதன் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டது. வழக்கமாக பன்றிகளுக்கு அவ்வப் போது ஏற்படும் தொற்று நோய்களை விட இது வேறுபட்டதாகவும் பன்றிகளுக்கு மட்டும் பரவாமல் மனிதர்களிடமும் பரவக் கூடியத் தன்மையுள்ளதாகவும் இக்கிருமி வெளிப்பட்டது.

இந்தக் கிருமி மனிதர்களுக்கு பரவியதன் பரிணாமத்தில் முதலாளியத்திற்கும் முக்கியப் பங்கிருக்கிறது. சுமித் ஃபுட்ஸ் (Smith Foods Inc.) எனப்படும் பெரு நிறுவனத்தின் பன்றிப் பண்ணையிலிருந்தே இந்நோய்க் கிருமி உருவானது. இலாபவெறியுடனும் அலட்சியத்துடனும், தொடர்  பராமரிப்புகள் ஏதுமின்றி பெருமளவிலான பன்றிகளை இந்நிறுவனத்திற்குரிய பண்ணையில் இறைச்சிக்காக வளர்த்து வந்தனர். அகற்றப்படாத கழிவுகள் காரணமாக அங்கு ஏற்பட்ட சுகாதரமற்ற சூழ்நிலை அங்கிருந்த தட்பவெட்ப நிலைக்கேற்ப பன்றிகளுக்கிடையே ஒரு புதுவிதமான தொற்று நோய்க் கிருமி பிறப்பெடுப்பதற்கு காரணமாக அமைந்தன. இது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு எளிதில் பரவியது. விரைவில், இந்நோய் எளிதில பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் இன்று(26.08.09) வரை 84 பேர் மரணமடைந்துள்ளனர். இப்பேர்ப்பட்ட சுகாதரமற்ற இந்நிறுவனம் தான், ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உற்பத்தி முறை”யைக் கொண்டிருப்பதாகக் கூறி ISO 14001 எனப்படுகின்ற  தரச்சான்றிதழ் 2005ஆம் ஆண்டில் முதன் முதலில் பெற்ற அமெரிக்க நிறுவனமாகும். முதலாளிகளின் தரநிர்ணய முறை பல்லிளிக்க வைக்கிறது.

செலவுகளை மிச்சம் பிடித்தும், இறைச்சியை அதிகளவு விற்றும் இலாபம் சம்பாதிக்க நினைத்த அந்நிறுவனத்தின் இலாபவெறி அலட்சியப் போக்கால் ஏற்பட்ட வினையாக இந்தக் கிருமி உருவாகியிருக்கிறது. தொடக்கத்தில், இந்நோயின் பெயர் ‘பன்றிக் காய்ச்சல்’ என்றிருந்ததால் பன்றிகளின் இறைச்சி விலை குறைந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பன்றிப் பண்ணை நிறுவனங்கள் முறையிட்டதன் காரணமாக, அந்நோய்க் கிருமியின் பெயரான H1N1 என்ற பெயரை ஒபாமாவே  முன்மொழிந்தார். உலக சுகாதார நிறுவனம் வழிமொழிந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட பல முதலாளிய நாடுகளிலும் மருத்துவம் முற்றிலும் தனியார் மயமாகிவிட்ட நிலையில், பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இந்நோய்ப் பரவலை எண்ணி பெரு மகிழ்ச்சி கொண்டன. அந்நிறுவனங்களின் பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்தன. முதலாளிகளின் அலட்சிப் போக்கால் மட்டுமே இந்நோய் தோன்றியது ஒருபுறமாக இருந்தாலும். இந்நோயின் பிறப்புக் குறித்து இன்றும் மர்மங்கள் நிலவுகின்றன.

முதலாளியத்தின் தலைமைப் பீடமான அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதற்கும் அச்சுறுத்துவதற்கும் உயிரியல் போரில் இறங்கியிருப்பதாக இன்றும் நம்பப்படுகின்றது. ஆங்கிலப் படங்களிலும், ‘ஈ’ போன்ற தமிழ்ப் படங்களிலும் கூட இது சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

1960களில் இது போன்ற முயற்சிகள் தொடங்கி விட்டன. புற்றுநோய் ஆராய்ச்சியை முன்வைத்து இச்சோதனைகள் தொடங்கின. AIDS: A Biological Warfare என்ற ஆங்கில நூலில் தமிழக மருத்தவர் புகழேந்தி அவர்கள் எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமொரிக்காவில் அமைக்கப்பட்ட MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals என்ற திட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். 1965 இல் உருவாக்கப்பட்ட  LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் இதற்கெனவே இயங்கி வந்தது. உயிரியல் சோதனை மட்டுமல்லமால் தனது சொந்த மக்கள் மீதே கதிர்வீச்சு சோதனை நடத்திய “திருப் பணி”களையும் இவ்வாய்வுக்கூடம் மேற்கொண்டதன் காரணமாக இக்கூடத்திற்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியது. அரசோ தொடர்ந்து ஆய்வுக்கூடங்களை இடம் மாற்றியதேத் தவிர ஆய்வுகளை நிறுத்தவில்லை.

அமெரிக்காவின் வழக்கறிஞர் பாய்ட் கிரேவ்ஸ் என்பவர் எழுதிய State Origin: The Evidence of the Laboratory Birth of AIDS என்ற புத்தகத்தில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை இயக்குநர் பசீரெல்லா(A.H.Passerella - Director, Department of Defence, USA) எழுதியக் கடிதம் ஒன்றின் மூலம் இதனை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். (பக்கம் 180)

இவ்வாறான நிகழ்வுகளின் மூலம், உயிரியல் சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்  வல்லாதிக்க நாடுகளின் சோதனைகளின் ஒரு பகுதியாகக் கூட இந்நோய்க் கிருமி உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்நோய்க் கிருமியின் உள்ளடக்கம் வலுத்த ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ‘ரென்ஸ்.காம்’ (Rense.com) என்ற செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இக்கிருமியின் உட்கூறுகளாக பறவைக் காய்ச்சல் (Avian flu)  மனிதக் காய்ச்சல்களுக்குக் காரணமான ‘ஏ’ ப்ளூ வகை(Human flu Type A) மற்றும் ‘பி’ ப்ளூ வகை(Human flu Type B), ஆசியாவில் வந்த பன்றிக் காய்ச்சலுக்கான கிருமி(Asian swine flu) மற்றும் ஐரோப்யிப் பன்றிக் காய்ச்சல் கிருமி (European swine flu) என பல்வேறு கிருமிகளின் கலப்பு வகையாக இக்கிருமி உள்ளது. பத்திற்கு ஒன்று (1/10%) விழுக்காட்டில் தான் இயல்பு நிலையில் இவ்வாறான வடிவத்தை இக்கிருமி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு குறுகிய காலகட்டத்திலேயே நான்கு கண்டங்களில் உருவான பல்வேறு கிருமிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமாக இக்கிருமி இருப்பதால் இது சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என இவ்விணையம் ஐயம் எழுப்புகிறது.

தற்பொழுது இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளையும் வழங்கி வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி யிருக்கிறது. முதலாளிகள் தலைமையிலான நாடுகளின் வல்லாதிக்க நோக்கிலும், முதலாளிகளின்  லாபவெறியிலும் உருவாக்கப்படும் புதுப்புது நோய்களாலும், மருந்துகளாலும் பாதிப்புக் குள்ளாக்கப்படுவது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களே ஆவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்முறைத் தற்காப்பு என்பதை விட காய்ச்சலுக்கு மருந்துகளை முன்  வைப்பதிலேயே இவர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். இன்றைய உலகமயச் சூழலை எதிர்கொள்ள மண்ணின் மரபுக்கேற்ற வாழ்முறையும், உணவு முறையுமே நமக்குக் கேடயமாக  வீற்றிருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

Pin It