இனி, வழக்கமான ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற நடவடிக்கைகளால் முல்லை பெரியாறு உரிமையை மீட்க முடியாது. காரியம் கைமீறிப் போய்விட்டது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் ஒரு சார்பாகச் செயல்பட்டபின், வேறு எங்கு வாதாடி நீதி பெறுவது?  

27.2.2006-இல், 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம் தீர்ப்பளித்தது. அதை முறியடிக்க 15.3.2006 அன்று கேரள அரசு, “கேரளப் பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு” சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. இச்சட்டம் முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர்த் தேக்கக் கூடாது என்றும் அவ்வணையின் முழுக்கட்டுப்பாடும் கேரள அரசுக்கு வந்துவிட்டது என்றும் கூறியது.  

அப்போது கேரளத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தார். ஆட்சி நடத்திய காங்கிரஸ் கூட்டணியும், எதிர்க்கட்சியாயிருந்த சி.பி.எம். கூட்டணியும் ஒருமித்து இந்தச் சட்ட முன் வரைவை நிறைவேற்றின. பின்னர் ஆளுநர் கையொப்பமிட்டு அதைச் சட்டமாக்கினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறியடித்த இந்தக் கலகத்தை காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், கேரள அரசு, நடுவண் அரசின் முகவரான ஆளுநர் ஆகிய அனைவரும் சேர்ந்து நடத்தியுள்ளனர்.  

இவ்வாறான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பு நடவடிக்கையை இந்திய அரசின் மறைமுக ஒப்புதல் இல்லாமல், செய்து விட முடியாது. அவ்வாறு தனது தீர்ப்பை முறியடித்ததை உச்சநீதிமன்றம் மனமுவந்து அங்கீகரித்தது. இவ்வாறு நாம் கூறுவதற்கு உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளே காரணம்.  

கேரளத்தின் மேற்கண்ட கலகச் சட்டத்தை எதிர்த்த தமிழக அரசு 31.3.2006 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது. அத்துடன் கேரளச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும்படி கோரியது. அதற்கு உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது?  

இரு மாநில முதல்வர்களும் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி 29.11.2006 அன்று இந்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சைபுதீன்ஜோஸ் தலைமையில் புதுதில்லியில் தமிழக, கேரள முதலமைச்சர்கள் மற்றும் இரு மாநில அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பலனில்லை. தனது தீர்ப்பை அவமதித்த கேரளத்தின் மீது உச்சநீதிமன்றத்திற்குச் சினமில்லை.  

வேறொரு நிகழ்வில் உச்சநீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது? சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி 2008ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தம் அறிவித்தார். மாநில முதல்வரே முழு அடைப்பு நடத்துவது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது என்று கூறி அ.இ.அ.தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. கடுங்கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். உடனே, பொது வேலை நிறுத்தத்தை உண்ணாப்போராட்டமாக மாற்றினார் கருணாநிதி. ஆனாலும், அரசுப் பேருந்துகள் ஓடவில்லை என்று அ.தி.மு.க. வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது ஆத்திரப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆட்சியைக் கலைத்துவிடுவோம் என்று மிரட்டினார். 

அச்சப்பட்ட கருணாநிதி உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டுக் கோட்டைக்கு ஓடிப் போனார். அத்துடன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முல்லைப் பெரியாறு வழக்கில், கேரள அரசைக் கண்டிக்கவில்லை உச்சநீதிமன்றம். சுமுகமாகப் பேசித் தீர்த்தக் கொள்ளச் சொன்னது.  

இப்பொழுது இறுதியாக, ஐந்து நீதிபதிகள் கொண்ட விரிவடைந்த அரசமைப்பு ஆயத்திற்கு வழக்கை மாற்றிவிட்டது. ஏன் இந்த இரட்டை அணுகுமுறை? இந்திய ஆளும் வர்க்கம் தமிழ் இனத்தை எப்படி அணுக வேண்டும் என்று வரையறுத்துள்ளது. அதன் ஒரு பிரிவான உச்சநீதிமன்றமும் அப்படியே அணுகுகிறது. இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசும் காவிரி உரிமை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாலாற்றுச் சிக்கல், தமிழக மீனவர் உரிமை, கச்சத்தீவு உரிமை, முல்லைப் பெரியாற்று உரிமை, ஈழத்தமிழர் உயிர்க்காப்பு என எல்லாவற்றிலும் தமிழ் இனத்தைப் பகையினமாகக் கருதியே செயல்படுகிறது. 

இப்படிப்பட்ட அனாதைச் சூழ்நிலை தமிழ் இனத்திற்கு இருக்கும் போது தமிழ்நாட்டு அரசியல் தலைமைகள் எப்படி இருக்க வேண்டும்? தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டி, நம் உரிமைப் பறிப்புகளை எதிர்த்தது. போராடும் ஈட்டி முனையாக விளங்க வேண்டும். ஆனால், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., கட்சிகள் அப்படிச் செயல்படுகின்றனவா? இல்லை. 

எச்சில் இலைகளுக்காக ஒன்றையொன்று கடித்துக் கொள்ளும் பிராணிகள் போல பதவி, பணம் ஆகியவற்றிற்காக ஒன்றையொன்று கடித்துக் கொண்டு, தமிழ் இனத்தை இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் காட்டிக் கொடுத்து, காவு கொடுக்கும் வேலையைத்தான் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் செய்கின்றன.  

இந்த இருகட்சிகளையும் உரித்து வைத்தது போல் புதிதாகப் பலகட்சிகள் தோன்றியுள்ளன. 2006 பிப்ரவரி 27இல் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது செயலலிதா முதலமைச்சர். அவர் உடனடியாக முல்லைப் பெரியாறு வடிகால் மதகுகளை இறக்கச் சொல்லி பொதுப்பணித் துறைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும். அப்போது தண்ணீர் அந்த அளவு இல்லை என்று இப்போது சாக்குச் சொல்கிறார் அவர். தண்ணீர் அந்த அளவு இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. 

136 அடிக்கு மேல் திறந்து கிடக்கும் வடிகால் மதகை இறக்கிப் பூட்டினால், தண்ணீர் வரும் போது தேங்கும். 142 அடி உயர்ந்ததும் மிச்ச நீரைத் திறந்துவிடலாம். தீர்ப்பின் அடிப்படையில் ஒரு மாமூல் நிலையை உண்டாக்கியிருக்கலாம்.  

அதன்பிறகு 2006 மே மாதம் ஆட்சிக்கு வந்த கருணாநிதி வடிகால் மதகுகளை இறக்கி இருக்கலாம். அவரும் அவ்வாறு செய்யவில்லை. விளைவு என்ன? இப்பொழுது 10.11.2009 அன்று உச்சநீதிமன்றம் விரிவடைந்த அரசமைப்பு ஆயத்திற்கு வழக்கை மாற்றும் போது இரு தரப்பும் நடப்பில் உள்ள மாமூல் நிலையைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதன் பொருள் என்ன? வடிகால் மதகுகள் பதின் மூன்றையும் தமிழக அரசு கீழே இறக்கக்கூடாது என்பதாகும். தீர்ப்பு வந்த 2006-இல் செயலலிதாவோ கருணாநிதியோ, வடிகால் மதகுகளை இறக்கியிருந்தால் அது மாமூல் நிலை ஆகியிருக்கும்.  

இதையெல்லாம் விடக் கொடுமை, 142அடி தேக்கலாம் என்ற தீர்ப்பை முடக்கிப் போட வழக்கை 5 நீதிபதி ஆயத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கேரளக் கோரிக்கையைத் தமிழக அரசு வழக்குரைஞர் ஏற்றுக் கொண்டது தான். தமிழக அரசின் ஒப்புதல் இன்றி வழக்கறிஞர் பராசரன் அவ்வாறு இசைவு தெரிவித்திருக்கமாட்டார். தமிழக அரசு ஒப்புதல் கொடுக்காமல் இருந்திருந்தால் அப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்காது.  

தன் விருப்பப்படி பராசரன் இசைவு தெரிவித்ததாக இதுவரை, கருணாநிதி கூறவில்லை என்பதிலிருந்தே, அவர் கூறியதைத்தான், வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளார் என்பது உறுதியாகிறது. இனி முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க யாரை நம்புவது? 

உச்சநீதிமன்றத்தை? உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை உச்சநீதிமன்றம் நீதிவழங்கினாலும் அதை செயல்படுத்துவது யார்?  

இந்திய அரசு?  

தமிழர்களைப் பகைவர்களாகக் கருதும் அரசு.  

தமிழக அரசு? 

இனத்தை விற்று வாழும் கட்சிகளின் பிடியில்!  

தமிழர்கள் தங்கள் ஆற்றலை நம்பிப் போராட வேண்டும்.  

என்ன போராட்டம்?  

1. மலையாளிகளையும் மலையாளி நிறுவனங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். 

2. கேரளாவுக்குத் தமிழ்நாட்டிலிருந்து எந்தப் பொருளும் செல்லாமல் தடுக்க வேண்டும்.  

ஆம். மலையாளிகள் “இனம்” என்ற ஆயுதத்தை வைத்து முல்லைப் பெரியாறு உரிமையை பறிக்கிறார்கள். நாம் அதே ஆயுதத்தை எடுக்க வேண்டும்.  

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.

Pin It