சமீபத்தில் இணையதளங்களில் ஒரு குறும்படம் அதிகம்பேரால் பார்க்கப்பட்டது. அது சமூகப் பிரச்சனையை பேசுகின்ற படம் என்பதுதான் ஆச்சரியமான செய்தி. குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வெளியிட்டுள்ள "யாருக்காக சிங்காரச் சென்னை" என்கிற படம்தான் அது. இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் உள்ள கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆறு ஆகியவைகளின் கரையில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை தமிழக அரசாலும், தனியார் நிறுவன பெருமுதலாளிகளாலும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களாலும் மொத்தமாக சூறையாடப்படும் வன்மத்தை பேசுகிறது இந்தப்படம். மொத்தமாய் நகரத்துக்கு வெளியே வழித்து எறியப்படும் உழைப்பாளி மக்களின் வாழ்க்கையின் அடுத்த பக்கத்தை காட்டுகிறது. புதிய இருப்பிடத்தின் வலியை சொல்கிறது.

சென்னையில் உள்ள கூவத்தை சீரமைக்க தமிழக அரசுடன் சீன நிறுவனம் ஒப்பந்தம் என்ற ராஜ் தொலைக்காட்சி செய்தியுடன் குறும்படம் துவங்குகிறது. மு.க.ஸ்டாலின் நகரில் திடீரென ஒருநாள் டோக்கன் கொடுக்கப்படுகிறது. வேறு இடத்தில் உங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவிக்கின்றனர். முழுமையாக டோக்கன் கொடுத்து முடிக்கும் முன்பு வீடுகள் இடிக்கப்படுகின்றது. தங்கள் வீட்டில் சிக்கிய பொருட்களை எடுக்கச்செல்லும் இளைஞர்கள் காவல்துறையால் நையப்புடைக்கப்படுகின்றனர். இப்படியாக கரையோரங்களில் உள்ள பல நகர்கள் திடீரென காலிசெய்யப்படுகின்றது. பல நகர்கள் திடீரென தீப்பற்றி எரிகிறது. 2009 இல் மட்டும் 22 சேரிப்பகுதிகளில் தீப்பிடித்து 128 குடிசைகள் எரிந்து சாம்பலானது. இதைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சென்னையை சுற்றி புதிதாக வருகின்ற நோக்கியா, மோட்டரோல, நிசான், ஜின்டால் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் சென்னை துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டி இருப்பதால் அவர்களுக்கு வசதியாக சாலைகளும் ரயில் பாதைகளும் போடப்படுகிறது. இதற்குதான் உழைப்பாளி மக்களின் வீடுகள் இடித்து நொறுக்கப்படுகிறது. உதாரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக 9 கிலோ மீட்டர் தூரம் துறைமுகத்திற்கு பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அவ்வழியில் பல தியேட்டர்களும், ஷாப்பிங் மால்களும், தனியார் கட்டிடங்கள் இருப்பதால் திட்டம் மாற்றப்பட்டு மதுரவாயல் முதல் துறைமுகம்வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டாயிரம் கோடி முதலீட்டில் சரக்கு லாரிகளும் கார்களும் மட்டுமே செல்லும் வகையில் நவீன சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் பன்னிரெண்டாயிரம் குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட இடங்களிலிருந்து விரட்டப்படும் மக்கள் எங்கே குடியேற்றப்படுகிறார்கள்? சென்னைக்கு வெளியே ஆவடி கேம்ப் பக்கம் கோரையில் அம்பத்தூர், கொரட்டூர், அயனப்பாக்கம் ஆகிய ஏரிக்கரைகளிலிருந்து விரட்டப்பட்ட ஆறாயிரம் குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். வேளச்சேரிக்கு அருகில் கண்ணகிநகரில் இப்படி விரட்டப்பட்ட பதினாராயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு வீடும் 160 சதுர அடிக்குள் முடக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 75 ஆயிரம் மக்கள் வசிக்கும் இப்பகுதியில் ஒரு அடிப்படை வசதியும் இல்லாத உயர்நிலைப் பள்ளியும் ஒரே ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. கழிப்பிடம் செல்வது அங்குள்ள பெண்களுக்கு தினமும் நரக வேதனைதான். இன்னொரு பகுதி செம்மஞ்சேரிக்கு பக்கம் உள்ள பொட்டல்வெளி இங்கு ஆறாயிரம் குடும்பங்கள் அனாதரவாக அலைந்து திரிகின்றனர். இங்கு ஒவ்வொரு வீடும் 140 சதுர அடிக்குள் முடிந்து போகிறது. இவையெல்லாம் இலவச வீடுகள் என நினைத்துவிடாதீர்கள் மாதம் 350 ரூபாய்வீதம் பதினைந்து ஆண்டுகளுக்கு கட்டவேண்டும். அதாவது இந்த ஆறாயிரம் குடியிருப்புகள் மூலம் மட்டும் நூற்றிநாற்பது கோடி அரசுக்கு வருமானம்.

தங்கள் பிழைப்பை மாநகரத்திற்குள் வைத்துள்ள உழைப்பாளி ஊருக்கு வெளியே விரட்டப்பட்டதால் தினமும் பிழைப்புக்கு பேருந்து வசதியற்ற இடங்களிலிருந்து எப்படி வருவார்கள்? பலவகையான வாகனங்களின் துணையுடன் வந்துசெல்ல ஒருநாளைக்கு அவர்களுக்கு 30 அல்லது 40 ரூபாய் தேவைப்படும். மாநகராட்சி பள்ளிகளில் படித்த குழந்தைகள் பல கிலோமீட்டர் பயணம் செய்து படிக்க வசதி மற்றும் வழி இல்லாத காரணத்தால் இடைவிலகலை சந்திக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் சேவைசெய்ய ஆட்சியாளர்கள் துடிப்பதை இந்த ஆவண குறும்படம் தோலுரிக்கிறது. மாநகர தெருக்களில் மக்களிடம் காட்டவேண்டிய படம் இது. அப்படி மக்களிடம் சென்றால் கீழ்காணும் கேள்வியை அவர்களிடம் எழுப்ப முடியும். சென்னை மாநகர மேயரும், துணை முதல்வரும் குடிசையில்லா சென்னை என்ற வார்த்தைக்குள் புகுந்துகொண்டு எளிய மக்களின் குடிசைகளை சென்னைக்கு வெளியே தூக்கி எறிகிறார்கள்.. அப்படியானால் நீங்கள் இந்த ஆட்சியை....?