ஓடினேன். ஓடினேன் வாழ்க்கையின் ஓரத் திற்கே ஓடினேன், .சென்னையில் பிழைக்கலாம் என்று வந்த என்னை, சென்னை போடா வெண்ணெய் என்றது என்று ஒரு நகைச்சுவை வரும். இது உண்மையாகவே உள்ளது சென்னைக்கு பிழைக்க வந்த அனைவருக்கும்.ஆனால் ரசிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், வாழ்க்கை வேதனையாகவே கழிகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, தாம்பரம் ஆகிய பகுதியில் காலை வேளையில் நின்று கொண்டிருந்தால் . ஒரு நாளைக்கு எத்தனை பேர் இடம் பெயர்ந்து வருகிறார்கள் என்று யாரும் பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது சென்னையில் மட்டும் சுமார் 90 லட்சம் மக்கள் உள்ளனர். நாளுக்கு நாள் சென்னை நகருக்கு வந்து செல்லும் மக்கள் தொகை மட்டும் 2.50லட்சம் என கணக்கிடப்படுகிறது.

1901ல் சென்னை மாநகரம் 70சதுர கி.மீ பரப்பளவோடு 5.40லட்சம் மக்கள் தொகை கொண்டதாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்குகிறது. சென்னை பெருநகர்ப் பகுதியின் பரப்பளவு 1189சதுர கி.மீட்டராக விரிவடைந்துள்ளது. மாநகராட்சியின் 155வட்டங்கள், 16நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் 214 கிராமங்களை கொண்டதாக உள்ளது. சென்னை பெருநகரில் 1731 குடிசைப்பகுதிகள் உள்ளன. இவற்றில் 1473 குடிசைப் பகுதிகள் மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகளாக உள்ளன என்றும் 242 குடிசைப்பகுதிகள் ஆட்சேபகரமான (ஆக்கிரமிப்பு) இடங்களில் உள்ளன என்றும் ஆட்சியாளர்களால் கூறப்படுகிறது. இதில் பெரும்பகுதி நீர்வழிக்கரையோரங்கள், சாலையோரங்களில் உள்ளன. மேம்படுத்தப்பட்ட குடிசைப்பகுதி என்ற வார்த்தையின் அர்த்தம் அங்கு வாழ்வோருக்கும் நமக்கும் புரியாத புதிர்தான்.

சென்னை நகர மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் சென்னை நகரின் பரப்பளவில் 6 சதவீதத்தில் மட்டுமே வசிக்கின்றனர். இவ்வளவு பரந்து விரிந்த சென்னை நகரில் ஒரு சிறு ஆய்வை மேற்கொண்டோம். சென்னை பாரிமுனையின் பாதைகளில் வாழ்வோர், சிந்தாரிப்பேட்டையில் உள்ள பூதபெருமாள் நகர் போன்ற இடங்களில் 44 வீடுகளை ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வு செய்த வீடுகளில் ஒரு கிருஸ்தவ குடும்பவம், இரண்டு இஸ்லாமிய குடும்பங்களும் இருந்தன இதர குடும்பங்கள் அனைத்தும் இந்துக்கள். இடம் பெயர்தல் குறித்த மிகப்பெரிய ஆய்வுகள் எல்லாம் வெளிப்படுத்தும் தகவல் என்னவென்றால் பெரும்பாலும் இடம்பெயர்பவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை எடுத்துரைத்துள்ளது. அதை நிருபிக்கும் வகையில்தான் நமது ஆய்வு முடிவுகளும் வந்துள்ளது. 4 குடும்பங்கள் தங்களின் சாதியை குறிப்பிடவில்லை ஒரு குடும்பம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஐந்து குடும்பங்களை தவிர மற்ற அனைவரும் தலித் மக்களாகவே உள்ளனர்.

இந்த குடும்பங்களில் மொத்தம் 172 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 21-+40 வயதுக்குட்பட்டோர் மொத்தம் 90பேர் அதில் ஆண்40, பெண்50இந்த வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகமாக உள்ளனர். ஆய்வில் பட்டியலிடப்பட்ட 172 உறுப்பினர்களில் மொத்தம் 66பேர் படிக்கவில்லை 31பேர் தாங்கள் என்ன படித்துள்ளோம் என்பதை குறிப்பிடவில்லை, பெரும்பாலும் இவர்களும் படிக்காதவர்களாகவே இருப்பார்கள்.

5வது வரை படித்தவர்களில் 13பெண்கள், 16 ஆண்கள் என மொத்தம் 29பேர்தான். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களில் பெண்கள் 4 பேர்தான். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் வெறும் இரண்டு பேர்தான். குறிப்பாக சொல்ல வேண்டியது. என்னவென்றால், கல்லூரி படிப்பு படித்தவர்களோ, தற்போது படிப்பவர்களோ ஒருவர் கூட இல்லை. சென்னை நகரைப் பொறுத்தவரை குடிநீர் என்பது சாதாரண குடிசைப் பகுதிகளில் வசிக்கும் (அரசு கணக்குப்படி) 10,56,414 பேரில் 31 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இதில் 42 சதவீதம் பேர் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் பெறுகின்றனர்.

இதுவே மற்றவர்கள் (அப்பார்ட்மென்ட்ஸ், தனிகுடியிருப்பு) 42 சதவீதம் பேர் குழாய் மூலம் தண்ணீர் பெறுகின்றனர். மீதி தனியார் மூலம் பெறுகின்றனர். இக்குடிநீர் அதிகபட்சம் ஒருவருக்கு 35 லிட்டர்வரைதான் கிடைக்கிறது. இது குடிசைப்குதிகளில் 25லிட்டராக உள்ளது. ஆனால் நபர் ஒருவருக்கு 120லிட்டருக்கு மேல் தண்ணீர் கிடைக்க வேண்டும். இது சென்னையைப் பொறுத்தவரை கானல் நீராகத்தான் உள்ளது.

சென்னை என்றாலே காலிகுடங்களுடன் வரிசையில் லாரிக்குப் பின்னால் ஓடும் நிலைதான் அன்றும், இன்றும், உள்ளது. நாம் எடுத்த ஆய்வில் கூட சென்னை குடிநீர் வடிகால் வாரிய குடிநீரை மட்டுமே அனைத்து குடும்பத்தினரும் நம்பி உள்ளனர். ஆனால் கிடைக்காதததால் தாகத்திற்கு நீர் வாங்கியே தாகம் தணிக்கின்றனர்.

சென்னை மாநகரப் பகுதிகளில் மட்டும் 2,05,020 குடியிருப்புகள் தனியறைகளற்ற குடியிருப்புகள் ஆகும். இவை அதிகபட்சம் 100சதுர அடி அளவிலான குடியிருப்புகளாகவே உள்ளன. இங்கு கழித்தல், குளித்தல் போன்றவை அனைத்தும் பொதுவெளியில் தான் நடைபெறுகின்றன. நாம் சந்தித்த வீடுகளில் இரண்டு வீடுகளில் மட்டும்தான் தனிக் கழிப்பிடங்கள் உள்ளது. மீதம் அனைத்து வீடுகளுமே பொதுக்கழிப்பிடத்தையும், பொதுவெளியையும்தான் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

நகரங்களில் வசிக்கும் மக்களுக்கே போதுமான அடிப்படை வசதிகள் கிடைக்காத பட்சத்தில் பிழைப்புத்தேடி வந்தவர்களையும் சேர்த்து 3.49 கோடி மக்களுக்கு குடிநீர், கழிப்பிடம், சாலை, பள்ளி, மருத்துவமனை என எதுவும் தமிழகத்தின் எந்த நகரத்திலும் இல்லை. நகரம் என்று சொன்னால் மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான தண்ணீர், கழிவு மேலாண்மை, மின்சாரம் போன்றவை போதுமான அளவு இருக்க வேண்டும் ஆனால் தமிழகத்திலோ நகரம் என்ற பெயரைத்தவிர நகரத்திற்கான எந்த வசதியும் இல்லை.

புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு சுரண்டியது வெளி மாநில தொழிலாளர்களைத்தான். 90 சதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். பெரும்பாலும் குடும்பத்துடன் இடம் பெயர்ந்து வரும் இம்மக்கள் தங்கும் இடம் கூவம் கரை மற்றும் குடிசைப்பகுதிகள் தான். அரசின் அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டுதல் கூட அதுதான். புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு சுரண்டிய தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்க வைக்கப்பட்ட இடம் கூவம் கரைகளே.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சென்னைக்கு பிழைக்க வருகின்றபோதிலும், அதிகம் வருவது விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் தங்குவதும் கூவம் மற்றும் குடிசைப்பகுதிகளில் தான். விவசாயம் பொய்த்துப்போனதால் இங்கு இடம் பெயர்ந்து வரும் இம்மக்கள் பெரும்பாலும் ஊர் திரும்புவதில்லை. சென்னையிலேயே குடிசை அமைத்து தங்கிவிடுகின்றனர். இவர்களைத் தான் ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்து சென்னைக்கு வெளியே அனுப்புகிறது. சிங்காரச் சென்னைக்கு இவர்கள் அழுக்கானவர்களாக தெரிகிறார்களாம். நவீன தீண்டாமையான இக்கொடுமை அரசின் பெயரால் நிகழ்த்தப்படுவது பெரும் வன்முறையாகும்.

நாம் சந்தித்த மக்கள் அனைவரும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் தான். 40 ஆண்டுகளாக இங்கே தான் இருக்கேன் என தன் பேத்தியை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாட்டி கூறுகையில், தேசமே தெருவில் கிடப்பதாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் அரசின் இலவச அரிசி உட்பட எந்த சலுகையையும் பெற முடியவில்லை. கழிப்பிட வசதி, மற்றும் குடிநீருக்காக பெரும் பகுதியை செலவழிக்கும் இம்மக்களுக்கு சேமிக்கும் வாய்ப்பு சாத்தியமில்லை.இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் அரசு தங்களுக்கு ஏதும் செய்யப்போவதில்லை என்பதே இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அசைத்துப் பார்க்குமா அரசு?