தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும் இன்னமும் பல தமிழ் மக்கள் இழிநிலையை மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டு மிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்பத் தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றித் தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகின்றார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக,நீதி நெறிகளாக, பண்டிகை, விரதம், நோன்பு, உற்சவங்களாக, நல்லநாள்,தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகிறார்கள்.

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல், தமிழ் பண்டிதர்கள்- அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட தமிழ் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்கின்றனர்.

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 2. தேவர்களின் முறையீட்டின் மீது, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று, உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார். 3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 4. ஆசைக்கு இணங்கி, பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. 5. அதன் பயனாய்ப் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 6.அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான். 7.

தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார். 8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை, விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள். 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதை ஆராய்வோம்.

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.

இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவைகள் ஒவ்வொன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்லுகிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், இந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும் நாம் ஆமாம் என்று சொல்லிக் கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

மாணவர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் அவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்த காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

(இந்துமதப் பண்டிகைகள் நூலிலிருந்து)

Pin It