ஆசீவக அறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தொல்காப்பியம் இலக்கண நூல் அல்ல என்கிறார். தொல்காப்பியம் இந்திய மெய்யியல் வரலாற்றின் மூல ஊற்று என்கிறார்.
சுற்றுச்சூழல் தொடர்புடைய ஐம்பூதக் கோட்பாடு பரிணாமக் கோட்பாடு போன்றவற்றின் விளக்கங்களை தொல்காப்பியத்தில் சுட்டுகிறார். அவரது தொல்காப்பியம் நூலிலிருந்து:
“பொருள் திணைகளில் ஏழாவதாக இடம்பெறும் இன்மை மிகச் சிறந்த அறிவியலின் வெளிப்பாடாகும். உயிர்களின் திரிவாக்கக் கோட்பாட்டை (Theory of Evolution) விளக்கும் நுட்பத்தைக் கொண்டது.
இவ் இன்மை தொல்காப்பியரால் அதே பொருளில் சுட்டப்பட்டிருப்பதை முதன் முதல் வெளிப்படுத்திய பெருமை கோ. வடிவேலு செட்டியார் அவர்களுக்கே உரியதாகும்.
இவ் இன்மையை முன்னின்மை, பின்னின்மை, ஒன்றில் ஒன்றின்மை, முற்றுமின்மை என நான்காக வகைப்படுத்தும் அகத்தியத் தருக்க நூற்பா. இவ்இன்மை எனும் கருத்தியலின் மூல வடிவமாகவே தொல்காப்பியரின்,
‘ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே’
எனத் தொடங்கும் நூற்பா அமைந்துள்ளது. படிமுறைக் கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்த அந்நூற்பா தமிழ் அறிவு மரபின் அடையாளச் சின்னங்களுள் ஒன்றாகும்.”
3400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடலைப் பாருங்கள்.
“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே;
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.