ஜனநாயக முறையில் நடத்தப்படும் அணுசக்திக்கு எதிரான போராட்டத்தின் மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை

19 மார்ச் 2012 அன்று கூடங்குளம் அணு உலையைத் திறப்பதற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்தார். இம்முடிவினை தொடர்ந்து, சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக பாதுகாப்பு பணியாற்றிய ஆயிரக்கணக்கான காவல் துறையினர் அனைவரும் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உடனே அனுப்பப்பட்டனர்.

ஒரு சிறிய மீனவ கிராமமான இடிந்தகரையில், இந்து மற்றும் கிறித்தவ மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். ஆகஸ்ட் 2011 தொடங்கி பெருவாரியான அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது கல் எறிவது, அவர்களின் வாகனங்களை சேதப்படுத்துவது என்று பல வகையான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. எனினும் போராட்டக்காரர்கள் அகிம்சை வழியில் சனநாயக முறைக்கு உட்பட்டு உண்ணாவிரதம், தர்ணா மற்றும் சாலை மறியல் மூலம் மத்திய அரசு மற்றும் அதன் அறிவியல் அறிஞர்களின் பொய் பிரச்சாரத்திலிருந்து அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

 கூடங்குளம் மற்றும் போராட்டம் நடக்கும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 7000 ஆயுதம் தாங்கிய தமிழக காவல்துறையினர் மற்றும் மத்திய காவல் படையினர் மார்ச் 23, 2012 வரை நிறுத்தப்பட்டிருந்தனர். இதில் கடலோர காவல்படையும் அடங்கும். இவர்கள் சுற்றி வளைத்துள்ள பகுதிகளில் சுமார் 10,000 பொது மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 946 முதியவர்கள், 1500 குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் 715 பேர்.

இடிந்தகரைக்கு அருகில் உள்ள கூத்தன்குழி என்னும் ஊரும், இதேபோல் காவல்படையினரால் சுற்றி வளைக்கப் பட்டிருந்தது. இதில் 553 பேர் தொடக்க பள்ளி செல்லும் குழந்தைகள், 5 வயதுக்கு உட்பட்டவர்கள் 198 பேர் மற்றும் 462 முதியவர்கள்.

இடிந்தகரை மக்கள் குடிதண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவை பொருட்களை வெளியூரிலிருந்தே பெற்று வந்தனர். ஒரு நாளைக்கு சுமார் 50 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, ஒரு குடம் ரூ2.50க்கு பெற்று வந்தனர். தமிழக முதல்வரின் அணு உலைத் திறப்பு உத்தரவினைத் தொடர்ந்து ஒரு டாங்கர் லாரியும் இடிந்தகரைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.இடிந்தகரை செல்லும் எல்லா சாலைகளும் காவல் துறையினரால் மூடப்பட்டதால் பால், தண்ணீர், உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இடிந்தகரை உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஊடகங்களும் (NDTV, Headlines Today, Puthiya thalaimurai) உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஒட்டுமொத்த பொது மக்களின் அழுத்தத்தினால் பின்னர் இந்த ஊடகத்தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. 

அருகாமையில் உள்ள கிராமங்களில், கடைவியாபாரிகள், இடிந்தகரை, கூத்தன்குழி கிராம மக்களைப் புறக்கணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். காவல் துறையின் பதிலடி அச்சத்தின் காரணமாய், பெரும்பான்மையான கடை வியாபாரிகள், இடிந்தகரை கிராம மக்களுக்கு பொருட்களை விற்க மறுத்து வந்தனர்.

திருச்செந்தூரில் இருந்து கூத்தன்குழி செல்லும் வழி உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டன. இதனால் மக்கள் கடல் வழியாக பயணிக்க வேண்டியதாயிற்று.

அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் பெரும் பங்கு இடிந்தகரைப் பெண்களைச் சார்ந்துள்ளது. த‌மிழ‌க ‌அர‌சு கூடங்குளம் ப‌ணியாள‌ர்க‌ளுக்கு பாதுகாப்பு அளிக்க‌வே, இந்த ‌ஆயுதக் காவல் படை முற்றுகை என்று விள‌க்க‌ம் அளித்தாலும், தொடர்ச்சியான ‌நிக‌ழ்வுக‌ளை உற்று நோக்கினால் ந‌ம‌க்கு புல‌ப்ப‌டுவ‌து ஒன்றுதான். த‌ங்க‌ள் உரிமைக்காக‌வும் வாழ்வாதார‌த்திற்காக‌வும் அர‌சாங்க‌த்தை எதிர்த்து போராடும் ம‌க்க‌ள் மீது வ‌ன்முறையை க‌ட்ட‌விழ்த்து அவ‌ர்க‌ளை ஒடுக்குவ‌த‌ற்கே இந்த நடவடிக்கைகள் என்னும் உண்மை புல‌ப்ப‌டும். 

கூடங்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிய கீழே கொடுக்கப்பட்ட நபர்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழு ஒன்று 30, 31 மார்ச் 2012 அன்று கூடங்குளம் அணு உலையை சுற்றி உள்ள பகுதிகளை சென்று பார்வையிட்டது.

·             திரு. சாம் ராஜப்பா, மூத்த பத்திரிக்கையாளர், மற்றும் கொல்கத்தாவில் இயங்கும் ஸ்டேட்ஸ் மேன் அச்சு ஊடகத்திற்கான பள்ளியின் நிர்வாக இயக்குநர்.

·             திரு. கிளாட்சன் சேவியர், மூத்த விரிவுரையாளர், லயோலா கல்லூரி

·   திரு. மகாதேவன், தலைவர், PUCL,                       கன்னியாகுமரி மாவட்டம்

·             திருமதி. பொற்கொடி, வழக்கறிஞர், உயர் நீதிமன்ற கிளை, மதுரை

·   திரு. இராஜன், PUCL, கன்னியாகுமரி மாவட்டம் 

முதல் நாள் (30 மார்ச் 2012)

அணு உலையை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடும் பல்வேறு கடற்கரை கிராமங்களில் இருந்து சுமார் 5000 மக்கள் திரண்டிருந்த இடிந்தகரை கிராமத்தைக் குழு சென்று பார்வையிட்டது. ஊரடங்கு நடைமுறையில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளை பற்றி மக்களிடம் கேட்டு அறிந்தது. போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினை சேர்ந்த திரு.சு.ப.உதயகுமார் மற்றும் திரு.புஷ்பராயன் அவர்களையும் சந்தித்தது.

21 மார்ச் 2012 அன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டு, கடுமையான சேதத்திற்கு உள்ளான, திருமதி. மீரா உதயகுமார் (திரு. சுப.உதயகுமார் அவர்களின் துணைவியார்) அவர்களால் நாகர்கோவிலில் நடத்தப்படும் SACCER என்ற பள்ளியை குழு சென்று பார்வையிட்டது. 

இரண்டாம் நாள் (31 மார்ச் 2012)

அணு உலையிலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் இருக்கும், சுனாமி புனர்வாழ்வு குடியிருப்பு பகுதியான காசா (CASA) நகருக்கு சென்று அங்கு வாழும் மக்களிடம் கலந்துரையாடியது. உண்மை அறியும் குழு பின்னர் கூடங்குளம் சென்று, கிராம மக்களின் கருத்துகளை பெற்றது.

பிறகு, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான திரு. பிரஷாந்த் பூசன் அவர்களுடன் இணைந்து, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் திரு. விஜயேந்திர பிதரி அவர் களை நேரில் சந்தித்து விளக்கங்களைப் பெற்றது.

உண்மை அறியும் குழுவின் பதிவுகள்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இராதாபுரம் தாலுகா பகுதியில் 144 தடையுத்தரவு இருப்பினும் மூன்றாயிரத்திலிருந்து, நான்காயிரம் மக்கள் வரை இடிந்தகரையிலுள்ள லூர்து தேவாலயத்தில் கூடி வருகின்றனர். இங்குதான் கடந்த ஐந்து மாதங்களாக தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகின்றது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கடுமையான காந்திய ரீதியிலான அமைதி வழி போராட்ட முறைகளையே பின்பற்றி வருகின்றார்கள்.

மாநில அரசினால் நடத்தப்படும் மதுபான கடைகளைத் தவிர்த்து மற்ற எல்லா கடைகளும் எல்லா கிராமங்களிலும் அடைக்கப்பட்டே இருந்தன. போதுமான நுகர்வோர் இல்லாததால் மதுபானங்கள் சலுகை விலைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. மற்ற கடைக்காரர்களை எல்லாம் கடையைத் திறக்கும் படி காவல்துறை வற்புறுத்தியும் கூட, அவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதர வாக கடையை மூடியே வைத்துள்ளார்கள். அதே போல இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக காட்டுவதற்காக மீனவர்களும் மீன் பிடிக்கச் செல்ல வற்புறுத்தப்படுகின்றார்கள், ஆனால் அவர்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்கள். அரசு இக்கிராமங்களுக்கு செல்லும் குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை தடுத்து வருகின்றது. குடிநீர் கொண்டு செல்லும் சுமையுந்துகளை தடுப்பதற்கு சாலைகளில் போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்தியுள்ளார்கள் என்கிறது அரசு. ஆனால் இந்த கற்களும், மற்ற பொருட்களும் எவர் ஒருவராலும் எளிதில் அகற்றக்கூடியவையாகும். அரசு கூறும் “சாலைத் தடைகளைத்” தாண்டி எங்கள் மகிழுந்து மிக எளிமையாக இக்கிராமங்களுக்குள் சென்றது. மேலும் அரசு இப்பகுதியில் பேருந்து போக்குவரத்தையும் துண்டித்துள்ளது, இதனால் முதியவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடிந்தகரை பகுதியை நெருங்கிய பொழுது ஒலிப்பெருக்கிகளின் சத்தம் எங்கள் காதைப் பிளந்தது. பத்து வயதிற்கும் குறைவான ஆறு அல்லது ஏழு சிறுவர்கள் ஒலிவாங்கியின் முன் நின்று கொண்டிருந்தார்கள். எப்படி அந்த வயது குழந்தைகள் பள்ளிக்கூட பாடல்களை கூறுவார்களோ அதே போல “மீண்டும், மீண்டும் நாங்கள் எழுவோம், ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவோம். இயற்கை எங்களது அன்னை. அதை அழிப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையுமில்லை” என்று தமிழில் இணைந்து கூறினார்கள். மற்றொரு குழந்தைகள் குழுவோ வெகு வேகமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார்கள். நீங்கள் என்ன வீட்டுப்பாடங்களையா எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள் என்ற கேட்டதற்கு மிக அலட்சியமாக எங்களை பார்த்த அவர்கள், வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் பங்குகொள்வதற்காக நாங்கள் பள்ளி செல்வதை நிறுத்தி பல நாட்களாகிவிட்டது என்றும், நாங்கள் அடுத்தடுத்த முழக்கங்களை எழுதிக் கொண்டிருக்கின்றோம் என்றும் கூறினார்கள். இதே போல மற்றுமொரு குழந்தைகள் குழு மாலை நடைபெறவிருக்கும் நாடகத்திற்கான திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்தார்கள். அணு உலையினால் ஏற்படும் தீமைகள் பற்றி அவர்கள் கொண்டிருந்த ஞானம் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு தெளிவாகியது.

தேவாலயத்தை ஒட்டிய கடற்கரையில் வரிசை, வரிசையாக பைபர் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. மக்களது அச்சத்தை போக்கும்வரை அணு உலை செயல்படக்கூடாது எனக் கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, இவர்களது காலைவாரி அணு உலை செயல்படுவதற்கான ஆணை வழங்கியதில் இருந்து இங்குள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமோ, மாநில அரசு அமைத்த நிபுணர் குழுவோ அணு உலையின் பாதுகாப்பு பற்றிய மக்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல இடிந்தகரைக்கு வரவேயில்லை என்று தேவாலயப் பகுதியில் குழுமியிருந்த மீனவர்கள் கூறினார்கள்.

நாங்கள் மீனவர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, மற்றொரு குழந்தைகள் குழு ஒலிவாங்கியின் முன்னால் வந்து நின்றார்கள். “அம்மா, அம்மா என உன்னை அழைத்தோம், நீயோ எங்களை அனாதைகளாக்கிவிட்டாய். கலாம் ஐயா, கலாம் ஐயா அணு உலை பாதுகாப்பைப் பற்றி பேச நீங்கள் யாரய்யா? என்ற அவர்களது முழக்கம் “நாராயண சாமியே உனது வாயை நீ மூடு” என்பதுடன் முடிவடைந்தது. இந்த குழந்தைகள் எல்லாம் வயதானவர்களாலோ, அல்லது போராட்டக்குழு தலைவர்களான சுப. உதயகுமார், புஷ்பராயனாலோ பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் அல்ல. தங்களது குழந்தைகள் கூறும் பல்வேறு முழக்கங்களை கேட்டுக்கொண்டே அங்கே குழுமியிருந்த பெண்கள் பீடி சுற்றிக்கொண்டிருந்தார்கள். 1000 பீடிக்களை சுற்றினால் 60 ரூபாய் கிடைக்கும் என அந்த பெண்கள் கூறினார்கள். ஆண்கள் மீன்பிடித்தலை தற்சமயம் நிறுத்திவிட்டதால், இந்த சொற்ப வருமானத்தைக் கொண்டு அவர்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றார்கள். நாங்கள் தேவாலயத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கு செல்லும் பொழுது ஒலி வாங்கியின் முன்னிருந்த சிறுவர்களது குரல்கள் மிகவும் சத்தமாக ஒலிக்கத் தொடங்கின. இவர்களது குரல்கள் பிரதம மந்திரிக்கு கேட்பதில்லையா என்று நாங்கள் கேட்கத் தொடங்கிய பொழுது “ஆலை மூடப்படும் வரை நாங்கள் போகமாட்டோம், போகமாட்டோம், பள்ளிகளுக்கு போகமாட்டோம்“ என்ற அவர்களது குரல் தூரத்தில் ஒலிக்கத் தொடங்கியது.

நாங்கள் சென்ற முதல் நாளன்று அருகில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்ன முட்டம் பகுதி மீனவர்கள், போராட்டக்காரர்கள் தங்களது ஆதரவை அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு தெரிவிப்பதற்காக தொடர் உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டனர். மாலை அங்கிருந்து செல்லும் முன்பு தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தங்கள் அடையாள பங்காக ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயை போராட்டக் குழுவிடம் கொடுத்தனர். இது போன்ற பங்களிப்புகளினால் தான் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றதே தவிர, மத்திய அரசும், அமைச்சர் நாராயணசாமியும் கூறுவது போல வெளிநாட்டு நிதியினால் அல்ல.

CASA என்ற கத்தோலிக்க அரசுசாரா அமைப்பினால் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர் களுக்காக கூடங்குளத்திற்கும், இடிந்தகரைக்கும் இடையில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள 450 வீடுகளைப் பார்த்தோம். முழுவீச்சில் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அணு உலையிலிருந்து 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் இக்குடியிருப்புகள் கட்டுவதற்காக இந்த இடத்தை 2006ல் தேர்ந்தெடுத்தது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர். போராட்டக்குழுவின் நம்பிக்கையைப் போல மாவட்ட ஆட்சியரும் இந்த அணு உலை எந்த ஒரு கட்டத்திலாவது நிறுத்தப்படலாம் என எண்ணியிருப்பாரோ. இல்லையென்றால் அணு உலைக்கு இவ்வளவு அருகில் ஒரு குடியிருப்புக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார். கெடு வாய்ப்பாக அணு உலை செயல்படத் தொடங்கி விட்டால் இக்குடியிருப்பில் உள்ள 20,000 மக்களும் வீட்டைக் காலி செய்துவிட்டு வெளியேற வேண்டியதுதான். 

நாங்கள் அங்கு தங்கியிருந்து விசாரணை செய்த இரண்டு நாட்களிலும் திரு. உதயகுமாராலோ அல்லது வேறு ஒரு தலைவரால் மட்டுமே இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது என்பதற்கான எந்த ஒரு சான்றையும் பார்க்கவில்லை. இது ஒரு உண்மையான மக்கள் போராட்டம். மக்கள் அதிகம் படித்தவர்களாக இல்லாத காரணத்தினால் திரு. உதயகுமார் போன்றோர் அந்த மக்களின் உணர்வுகளை அரசிடமும், மற்ற நிர்வாகங்களிடமும் சரியான முறையில் எடுத்துச் செல்வதற்காக உதவி வருகின்றார்கள். சட்டத்தின் எல்லா வழிகளையும் பயன்படுத்தி அரசு திரு. உதயகுமாரின் மீது 96 பொய் வழக்குகளை பதிவு செய்து, கைது செய்துவிட முடியும் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றது.

காவல்துறை திரு. உதயகுமாரை கைது செய்யும் அந்த நொடியில் அமைதியாக நடந்து வரும் இப்போராட்டம் வன்முறையான ஒன்றாக மாறக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகளும் அங்கு தெரிகின்றது. 10.9.2011 முதல் 29.12.2011 வரை மட்டும், 107 முதல் தகவல் அறிக்கைகளை 55,795 நபர்கள் மீதும் மற்றும் “பலரின்” மீதும் காவல்துறை பதிவு செய்திருக்கிறது. அவற்றில், 3,500 பேர் மீது “தேசதுரோகம்” மற்றும்/அல்லது “தேசத்திற்கு எதிராக போர் தொடுத்தல்” ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத் திலும் அல்லது இந்தியா சுதந்திரம் அடைந்த பின் னும்கூட, ஒரே காவல் நிலைத்தில் இத்தகைய வழக்குகள் இத்தனை பெரிய எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாக இருக்கலாம். இது சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். அமைதியான வழியில் ஜனநாயக முறை யில் போராடும் மக்கள் மீது இத்தகைய வழக்குகளை காவல்துறை பதிவு செய்வது, எதிர்க் கருத்துக்களை நசுக்குவதற்குத் தானே தவிர, சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்காக அல்ல.

செல்வி ஜெயலலிதா அணு உலைக்கு பச்சைக் கொடி காட்டிய நாளிலிருந்து 5000 காவல் துறையினரும், துணை காவல்துறை ஆணையர் முதற்கொண்டு திரு. உதயகுமாரை கைது செய்யும் கட்டளையுடன் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். லூர்து தேவாலயத்தில் கூடியிருக்கும் 7000 மக்களும் மிகத் தெளிவாக கூறிவிட்டார்கள், ‘ஆண்கள், பெண்களாகிய எங்கள் அனைவரையும் கைது செய்துவிட்டு கடைசியாக திரு.உதயகுமாரை நீங்கள் கைது செய்யுங்கள்’ என்று, இதனால் மிக மெதுவாக தங்கள் நடவடிக்கையை எடுக்க காவல்துறை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

திரு.உதயகுமார் அவர்களை கைது செய்ய இயலாமையால், அவரது மனைவி திருமதி. மீரா அவர்கள் நடத்தி வரும் பள்ளிக் கூடத்தையும், அதன் நூலகம், பள்ளிக்கூட மேசை, இருக்கைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கியும், சுற்றுப்புறச் சுவரை இடித்தும் உள்ளார்கள். இந்த பள்ளிக்கூடம் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் நாகர்கோயிலில் இருக்கின்றது. இதுபோன்ற துன்பு றுத்தல்களால் எல்லா வகையான அமைதி யான வழிகளிலும் போராட்டத்தை வலுப்படுத்தும் அவரது எண்ணம் மேலும் அதிகமாகி வருகின்றது.

Pin It