முதலாவது

எது குறித்தென்ற

தெளிவு வேண்டும்.

 

இரண்டாவது

இதுவரை இதுபோல்

இல்லாதிருக்க வேண்டும்.

 

மூன்றாவது

முந்தையவற்றிலிருந்து ஓரடி

முன்னே போக வேண்டும்.

 

நான்காவது

நாளை எங்காவது

பேசப்பட வேண்டும்.

 

ஐந்தாவது

அதுவாய் இறங்கி

வரவேண்டும்.

 

ஆறாவது

அடுத்தவரைக் கவர

ஆகிச் செய்ததாய்

இருக்கக் கூடாது.

 

ஏழாவது

ஏதாவது தொக்கி

நிற்றல் நலம்.

 

எட்டாவது

எதையாவது அதுவே

சொல்லவேண்டும்.

 

ஒன்பதாவது

ஓசை நயமிருத்தல்

ஒன்றும் குற்றமில்லை.

 

பத்தாவது

பிறந்த கவிதை

கொள்ள வேண்டும்

பொருத்தமான

தலைப்பொன்றும்.

 

- செல்வராஜ் ஜெகதீசன்

Pin It