ஒரு மனித உயிர்கூட பட்டினி கிடக்காத நிலை ஏற்படும் வரை

ஒரு மனித உயிர்கூட துன்புறுத்தப்பட்டு உருக்குலைக்கப்படாத நாள் வரும் வரை

ஒருவர்கூட தனது நம்பிக்கைகளுக்காக சித்திரவதை செய்யப்படாத நாள் வரும் வரை

நமது பணி நிறைவடையப் போவதில்லை.

கோடிக்கணக்கான ஆண்டுகளாக குறிப்பிட்ட ஒரு நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தப் பூவுலகில், இயற்கை எனும் ஸ்ருதி பிசகாத ஓர் இயந்திரம் சீராக இயங்கிக் கொண்டு வந்திருக்கிறது. இந்த இரண்டின் கடைசிக் குழந்தைகள் நாம். கடைக்குட்டிகள் எப்பொழுதுமே அதிக சுட்டித்தனம் செய்வது இயல்பு. ஆனால் அந்த சுட்டித்தனம் எல்லை மீறி, அந்த இயந்திரத்தின் அடிப்படை கட்டமைப்பையே குலைப்பதாக மாறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நாம் பூமியின் குழந்தைகள் என்பதை சிலர் மறந்தாலும், பலர் மறக்கவில்லை. இந்த மறதி அதிகமாகும்போது பழசை நிறைய பேர் நினைவுபடுத்திச் சென்றிருக்கிறார்கள், நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையைச் சுரண்ட, பூமியைச் சூறையாட மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக வரலாறு முழுவதும் மக்களின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டே வந்திருக்கிறது. உலகின் ஆதி இனங்களான பழங்குடிகளின் தலைவர்கள் ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம், முதலாளிகளிடம் இருந்து இயற்கையைக் காப்பதற்கான தங்கள் போராட்டத்தை காலங்காலமாக முன்னெடுத்து வந்துள்ளனர். தமிழ் மன்னன் பாரி, சோட்டா நாக்பூர் பீடபூமியைச் சேர்ந்த பிர்சா முண்டா, செவ்விந்தியத் தலைவன் சியாட்டில், பிரேசில் அமேசான் காடுகளின் சிகோ மென்டிஸ், கென்ய கவிஞரான கென் சரோ விவா என உலகின் ஒவ்வொரு மூலையிலும், எல்லா காலங்களிலும் யாராவது ஒருவர் இதற்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். இந்த சூழல் காப்பாளர்கள் மட்டுமின்றி ராஜஸ்தான் பிஷ்னோய் மக்கள், இமயமலைத் தொடர்களில் சிப்கோ, கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு, நர்மதை அணைக்கு எதிராக காலங்களைக் கடந்து மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் உலகமயம், ஏகாதிபத்தியம், முதலாளிகளை எதிர்த்து, மனித உரிமைகள்-சுற்றுச்சூழல் உரிமைகளை வலியுறுத்தி தமிழில் பேசியவர்களில் முக்கியமானவர் நெடுஞ்செழியன். தமிழில் இன்றுள்ள அளவுக்கு சுற்றுச்சூழல் சொல்லாடல் உருவாக முக்கிய காரணம் அவரது ஒருங்கிணைப்பில் செயல்பட்ட "பூவுலகின் நண்பர்கள்" இயக்கத்தினரும், அவர்களது எழுத்து, கருத்துப்பரப்பல் உள்ளிட்ட களப்பணியும்தான். பல்வேறு புத்தகங்களும், காலாண்டு இதழாக நடத்தப்பட்ட "பூவுலகு"ம் அந்த இயக்கத்தின் முக்கியமான பங்களிப்பு. பலராலும் பாராட்டப்பட்ட "பூவுலகு" காலாண்டு இதழின் பயணம் நிதிப் பற்றாக்குறையால் 10 இதழ்களுடன் முடிவுக்கு வந்தது. இதே நோக்கத்துடன் எழுத்தை பரவலாகப் பயன்படுத்தியவர் "புதிய கல்வி" இணையாசிரியராக இருந்த அசுரன். இருவரும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வந்தபோதும், எதிர்பாராத தருணத்தில் இறப்பைத் தழுவினர். அவர்களது பேரிழப்பு நேர்ந்த சூழலில், அவர்களால் உத்வேகம் பெற்றவர்கள் இணைந்து "பூவலகின் நண்பர்கள்" அமைப்பாக தொடர்ந்து செயல்பட முடிவெடுத்தோம்.

காலமாற்றத்தைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் இணையதளமான www.poovulagu.org-யை கடந்த ஆண்டு தொடங்கினோம். பிறகு www.poovulagu.blogspot.com என்ற வலைப்பதிவு, ஆர்குட் சமூக வலைத்தளம், gmail மின்னஞ்சல் குழு போன்றவற்றை நடத்தி வருகிறோம். தமிழர் அனைவரையும் சென்றடைய அச்சிதழ் தேவை என்பதை உணர்ந்து, உங்கள் கரங்களில் தவழும் "பூவுலகு" இதழை மீண்டும் தொடங்கியுள்ளோம்.

பிரச்னைகளும் நெருக்கடிகளும் கணக்கின்றிப் பெருகிவிட்ட இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனித குல நன்மைக்காக கம்பீரமான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அப்படி போராடுபவர்களுக்கு எதிராக உலகெங்கும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு, மனித உரிமைப் போராளி விநாயக் சென் சத்தீஸ்கர் அரசின் அடக்குமுறையால் விசாரணை இன்றி இரண்டு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில்தான் சிறந்த முன்மாதிரிகளும் உருவாகின்றனர். இதற்கு உதாரணமாக, இலங்கை சண்டே லீடர் இதழ் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கூறலாம். பிறப்பால் சிங்களரான அவர், மரணம் துரத்திக் கொண்டிருந்த நிலையிலும் அப்பாவி ஈழத்தமிழர்களுக்காக கடைசி மூச்சு வரை முழுமையாக ஆதரவளித்தார். மனித குல வரலாறு முழுவதும் இதுபோன்ற எண்ணற்ற போராட்டங்களால் மனிதத்துவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தரும் பெரும் உத்வேகத்தை அடிப்படையாக மீண்டும் வருகிறது "பூவுலகு".

சூழலியல் குறித்து தெரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கும் நிலையில், இரு மாத இதழாகத் தொடங்கும் "பூவுலகை", மாத இதழாக மாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு வாசகர்களான உங்களிடம்தான் உள்ளது. நீங்கள் தரும் நிலைத்த ஆதரவே இந்த இதழின் எதிர்காலத்துக்கு அடிப்படை. இதழின் உள்ளடக்கம், வடிவமைப்பு, இடம்பெற வேண்டிய பகுதிகள், இதழின் வளர்ச்சி தொடர்பாக உங்கள் கருத்துகளை கட்டாயம் எங்களுக்குத் தெரிவியுங்கள். வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுப்போம்.

- ஆசிரியர் குழு

 

**************

நிறுவிய ஆசிரியர்: சி.மா. பிரிதிவிராஜ்

ஆசிரியர் குழு:

சீனு.தமிழ்மணி

கு.சிவராமன்

ஆதி வள்ளியப்பன்

ஆர்.ஆர்.சீனிவாசன்

கோ.சுந்தர்ராஜன்

அ.தேவநேயன்

சட்ட ஆலோசனைக் குழு:

பி.சுந்தரராஜன்

மு.வெற்றிச்செல்வன்

முகவரி:

பூவுலகின் நண்பர்கள்,

A-2, அலங்கார் பிளாஸா,

425, கீழ்ப்பாக்கம் கார்டன் பிரதான சாலை,

சென்னை - 600 010.

புரவலர் கொடை ரூ.10000

ஐந்தாண்டு கொடை ரூ.5000

ஆண்டு கொடை ரூ.100

தனியிதழ் கொடை ரூ.20

 

 

Pin It