அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் விரைவில் ஏராளமான மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வெப்பப் பேரிடரை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வரும் நிலையில் ஆட்சியாளர்கள் இதை சமாளிக்க உடனடியாக செயல்பட, வெப்பத்தாக்குதல் முன்னெச்சரிக்கைகள் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம் (The International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC) யு.எஸ். பன்னாட்டு வளர்ச்சி உதவி முகமைடன் (the United States Agency for International Development (USAid) இணைந்து இது பற்றிய உலகின் முதல் உச்சிமாநாட்டை அண்மையில் நடத்தியது.

இந்த நிகழ்நிலை மாநாட்டில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள வெப்பத்தை குறைக்க மரம் நடுதல், உட்புற வெப்பநிலையை குறைக்க பிரதிபலிப்பு மேற்கூரைகளை அமைத்தல் போன்ற திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. 2023ல் உச்சபட்ச வெப்ப உயர்வுக்குப் பிறகு உலக மக்கட்தொகையில் பாதி பேர் அதாவது 3.8 பில்லியன் மக்கள் ஆண்டில் ஒரு நாளேனும் உயிரும் உடலும் நொறுங்கும் அளவுக்கு நிலவிய கொதிக்கும் வெப்பநிலையை அனுபவித்தனர். ஹரிக்கேன், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது நிசப்த கொலையாளி என்று வர்ணிக்கப்படும் இந்தப் பேரிடர் உரிய முக்கியத்துவத்தைப் பெறவில்லை.

கற்பனைக் கதையும் கண்ணெதிரில் நடப்பதும்

இதில் அரசாங்கங்கள், உள்ளூர் நிர்வாகங்கள், மனிதாபிமான குழுக்கள், நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் உயர் வெப்பத்தை சமாளிக்க உதவும் வழிகள் பற்றி பேசப்பட்டது. புயல்களுக்குப் பெயரிடுவது போல வெப்ப அலை வீச்சுகளை பிரபலப்படுத்த அவற்றிற்கும் பெயரிடும் முறையை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.extreme heat in somalia“மில்லியன்கணக்கான இந்திய மக்களைக் கொன்ற வெப்பத்தாக்குதல் பற்றிய காட்சியுடன் தொடங்கும் கிம் ஸ்டான்லி ராபின்சனின் (Kim Stanley Robinson) வருங்கால அமைச்சரகம் (Ministry for the Future) என்ற அறிவியல் புனை நாவலில் கற்பனையாக கூறியுள்ளது. இதுபோல உண்மையில் இன்னும் பேரழிவு எதுவும் நடக்கவில்லை” என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் ஜாகன் சாப்பகயின் (Jagan Chapagain) கூறுகிறார்.

மற்ற பேரிடர்களை விட வெளிப்படையாக கண்களால் பார்க்க முடியாத வெப்பத்தாக்குதல் மனித வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் திருடிச் செல்கிறது. இந்தப் பேரிடரால் மனித குலத்தின் கூட்ட மரணம் விரைவில் நிகழும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். பல உலக நாடுகளில் வெப்பம் மக்களின் துயரங்களுக்கு ஒரு முக்கிய காரணமாகிறது. அமெரிக்காவில் மற்ற பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட இதனால் ஏற்படும் மரணங்கள் அதிகமாக உள்ளன.

ஆனால் இது திடீரென்று, மற்ற இடர்களைவிட மெதுவாக நிகழ்வதால் நம் புறக் கண்களால் இதன் தாக்கத்தை சுலபமாகப் பார்த்து உணர முடிவதில்லை. இதனால் இதன் தாக்கம் பற்றிய செய்திகள் மிகக் குறைவாகவே வெளிவருகின்றன. புயல்கள் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகள் போல் இல்லாமல் இதனால் ஏற்படும் இழப்புகளைக் கண்டறிய பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் ஆகிறது. நாற்பதாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட செஞ்சிலுவை சங்கத்தின் ரேடார் வரலாற்றில் இப்பேரிடர் செய்திகள் இப்போது அதிகமாக வருகின்றன.

வெப்ப அலையை சமாளிக்க 2018ல் முதல்முறையாக வட கொரியா, 2021ல் வியட்நாம், 2022ல் கிஜிக்ஸ்தான், தஜிக்கிஸ்தான், 2023ல் கிரீஸ், பங்களாதேஷ் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் நிதியுதவி கோரி அவசர அழைப்பு விடுத்தன. இந்த காலகட்டத்தில் வெப்ப அலைக்கான நிதியுதவியின் அளவு நான்கு மடங்கு உயர்ந்தது. புயல், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களுக்கு வழங்கப்படும் நிதியுடன் ஒப்பிடும்போது இந்த உதவி மிகக் குறைவே.

உயர் வெப்பத்தை சமாளிக்கும் உலகின் முன் மாதிரி நகரம்

இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் 2 டிகிரி வெப்பநிலை உயரும்போது ஏற்படும் உயிரிழப்புகள் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று லேன்சட் (Lancet) என்ற பிரபல மருத்துவ ஆய்வு இதழ் கணித்துள்ளது. சீனாவில் ஆண்டிற்கு 20000 முதல் 80,000 வரை வெப்ப அலைகள் உருவாகும் என்று மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது. வெப்ப அலை பற்றிய தரவுகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. பல்வேறு வழிகளில் வெவ்வேறான தர நிர்ணய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை துண்டுதுண்டான தரவு செய்திகளாக சேகரிக்கப்படுகின்றன. இதை மேம்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்.

வெப்ப அலைவீச்சுகளால் 2023ல் பிரான்சில் 5,000, ஜெர்மனியில் 3,000, இங்கிலாந்தில் 2,295 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த நாடுகளில் மக்கட்தொகை குறைவு. மிகச் சிறந்த சுகாதாரத் துறை செயல்பாடுகள் இங்கு உள்ளன. இதே காலகட்டத்தில் இந்தியாவில் 179, பாகிஸ்தானில் 22, மலேசியா மற்றும் தாய்லாந்தில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். குழப்பமும் குளறுபடிகளும் நிறைந்த அணுகுமுறையால் முரண்பாடான விவரங்கள் வெளியிடப்படுவதே இதற்குக் காரணம்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குகள்படி 1998-2017 காலத்தில் 166,000 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளது. வெப்ப தாக்குதலால் உலக மக்கத்தொகையில் 10% மட்டுமே உள்ள, ஆசியாவை ஒப்பிடும்போது குறைவான வெப்பநிலையுடைய ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தவர்களே மரணமடைந்தவர்களில் பாதி பேர். மிக பலவீனமான, எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியோர், நோயாளிகள், திறந்தவெளியில் வேலை செய்யும் மக்கள் காற்றோட்ட வசதியில்லாத இடங்களில் வாழ்கின்றனர். இவர்கள் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சியாரோ லியோன் நாட்டில் உள்ள ஃப்ரீ டவுன் நகரம் வெப்ப அலையை சமாளிப்பதில் உலகிற்கு முன் மாதிரியாக உள்ளது. இம்மாநாட்டில் பேசிய அந்நகரின் மேயர் இவானா-கிசாயேர் (Yvonne Aki-Sawyerr) வெப்ப அலை மேலாளரை (heat officer) நியமித்துள்ளார்.

இந்த நகரத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இடங்களை அடையாளம் காணுதல், வெப்ப அலை தாக்குதல் பற்றிய முன்னெச்சரிக்கை செய்திகளை வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் அனுப்புதல், திறந்தவெளி சந்தைகளில் நிழற்பரப்புகள் அமைத்தல், 2030ம் ஆண்டிற்குள் மரம் நடும் இயக்கத்தின் மூலம் குளிர்ச்சி தரும் 24 பெருவழிச் சாலைகளை உருவாக்குதல் போன்ற முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நகரின் 45% மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளில் கட்டிடங்கள் மீது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி படலங்கள் பொருத்தப்பட்ட மெல்லிய இரும்பு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கட்டிடங்களின் கீழ்ப்பகுதியில் வெப்பநிலையை 6% குறைக்க உதவியுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேற்கூரை அமைக்கும் பணிகள் எளிமையானதில்லை. கடுமையான புயல்களின்போது சந்தைகளில் இருக்கும் நிழற்பரப்புகள் தூக்கி எறியப்படுகின்றன. இதனால் இவை நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும் பொருட்களால் கட்டப்பட வேண்டியுள்ளது. இதற்கான நிதியைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. என்றாலும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கப்படுவது மக்களிடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்படவில்லை. புதிய தொழில்நுட்பங்களை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று இவானா-கிசாயேர் கூறுகிறார்.

வெப்பநிலையை சமாளிக்க குளிர்சாதன பேருந்துகள்

வெப்ப அலைக்குத் தயாராக இருக்க உதவும் செயல்களை செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டு வருகிறது. ஹனாய் வியட்நாமில் மே 2023ல் ஏற்பட்ட ஒரு வெப்பத் தாக்குதலுக்கு முன்பு தன்னார்வலர்கள், தெரு வியாபாரிகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், வெளிப்புற வேலை செய்பவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குளிர்சாதன வசதியுடைய, குளிர்ச்சி தரும் நகரும் பேருந்துகளை நிறுத்தினர். குளிர்ந்த நீர் விநியோகம், அமர நிழல் தரும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

வெப்பநிலை அடிக்கடி 45 டிகிரிக்கும் கூடுதலாக நிலவும், ஈரப்பதம் அதிகம் உள்ள நேபாளத்தில் உயரம் குறைவான தென்பகுதிகளில் தன்னார்வலர்கள் முன்னெச்சரிக்கை செயல்முறையை மேம்படுத்த, உள்ளூர் நிர்வாகத்தினர் குளிருந்த தங்குமிடங்களை அமைக்க, உயர்வெப்பநிலை சம்பவங்களின்போது மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வலியுறுத்திவருகின்றனர். 2023ல் உயர் வெப்பம் காரணமாக டெராய் (Terai) பகுதியில் பள்ளிகள் பல நாட்கள் மூடப்பட்டன.

“இளைஞர்களிடையில் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று அந்நாட்டின் செஞ்சிலுவை சங்க பேரிடர் பிரிவு இயக்குனர் சாகர் ரெஸ்தா (Sagar Shrestha) கூறுகிறார். கூட்டத்தில் அரசுகள் இந்த பேரிடரை சமாளிப்பது பற்றிய வழிமுறைகளை சமூகங்கள், நகரங்கள், நிறுவனங்களுக்கு வழங்க உதவும் அதிதீவிர வெப்பநிலைக்கான செயல் மையத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

வெப்ப அலை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் உலகளவில் இரண்டு மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 2 அன்று உலக வெப்ப அலை விழிப்புணர்வு நாள் கொண்டாடப்படும். மற்ற பேரிடர்கள் போல வருங்காலத்தில் செஞ்சிலுவை சங்கம் இந்த பேரிடர்ஐ குறைக்க உதவும் கருவிகள், திட்டமிடுதல்கள், உடனடி மீட்புப் பணிகள், வழிகாட்டுமுறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மற்ற பேரிடர்கள் போல இதற்கு ஒரு நிலைப்படுத்தப்பட்ட வழிமுறை இல்லை. மனித குலம் இன்னும் இதற்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை.

உலகின் வெப்ப அலைத் தாக்குதல்கள் பற்றிய இந்த முதல் மாநாட்டின் மூலம் அறிவியல் புனைவாக எழுதப்பட்ட நாவலில் கூறப்பட்டுள்ளவை கற்பனையாகவே இருக்க இப்போதே மனித குலம் செயலில் இறங்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

** ** **

மேற்கோள்கள்

https://www.theguardian.com/environment/2024/mar/27/extreme-heat-summit-to-urge-leaders-to-act-on-threat-from-rising-temperatures?

&

 https://www.ifrc.org/article/heatwaves-ifrc-global-heat-summit-tackle-invisible-killer

&

https://www.ifrc.org/press-release/global-summit-announces-sprint-action-tackle-consequences-extreme-heat#

&

https://www.usaid.gov/news-information/press-releases/mar-28-2024-usaid-and-ifrc-hold-global-summit-extreme-heat-launch-global-action-sprint

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

காற்றுமாசு Type2 வகை சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது என்று இந்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. டெல்லி மற்றும் சென்னை நகரங்களில் குடியிருக்கும் 12,000 பேரிடம் ஏழாண்டு காலம் நடந்த ஆய்வில் இருந்து பி எம் 2.5 (PM 2.5-parts per million) அளவுள்ள துகள்களுக்கும் உயர் இரத்த சர்க்கரை அளவிற்கும் அதன் மூலம் Type2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நுண் துகள்கள் கலந்துள்ள மாசுக் காற்றை சுவாசிப்பதால் ஏற்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் முதல் ஆய்வு

ஒரு முடியிழையின் முப்பதில் ஒரு பங்கு மெல்லிய அளவுடைய இந்த நுண் துகள்கள் இரத்த ஓட்டத்துடன் கலந்து பல சுவாசக் கோளாறு நோய்களையும், இதய நோய்களையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 2010ல் தொடங்கி நடைபெறும் இந்த ஆய்வுகள் நாட்பட்ட நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய்கிறது. உலக சுகாதார நிறுவனம் உலகளவில் காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் இந்தியாவில் சுற்றுப்புறத்தில் உள்ள பிஎம் 2.5 துகள்களுக்கும் Type2 சர்க்கரை நோய்க்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி நடத்தும் முதல் ஆய்வு இது.delhi smoke pollutionடெல்லியில் பிஎம் 2.5 அளவு துகள்களின் சராசரி அளவு 80- 100 ம்யூ/எம்3. சென்னையில் இதன் அளவு 30-40 ம்யூ/எம்3. உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ள அளவு 5 ம்யூ/எம்3 மட்டுமே. இந்தியாவின் காற்றின் தேசிய தர அளவு 40 ம்யூ/எம்3. ம்யூ என்பது காற்றுமாசின் அளவைக் குறிக்க உதவும் ஓர் அலகு. இந்தியர்கள் ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், தொற்றாத நோய்களால் அவதிப்படுகின்றனர். மக்கத்தொகையில் 11% அல்லது 101 மில்லியன் பேர் சர்க்கரை நோயுடன் வாழ்கின்றனர்.

சுமார் 136 மில்லியன் பேர் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புள்ளவர்கள் என்று பிரபல மருத்துவ இதழ் லேன்சட் (Lancet) வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

2019ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இது 6.2 சதவிகிதமாகவும் 2016ல் யு கேயில் இது 8.6 சதவிகிதமாகவும் இருந்தது. இந்தியாவில் முன்பு கணிக்கப்பட்டிருந்ததைவிட இப்போது சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் பெரும்பாலோரும் கிராமப் பகுதிகளை விட நகரங்களிலேயே அதிகமாக வாழ்கின்றனர் என்று லேன்சட் ஆய்வுகள் கூறுகின்றன.

பி.எம்.ஜே (BMJ) என்ற சர்வதேச மருத்துவ ஆய்வு அமைப்பால் டெல்லி மற்றும் சென்னையில் வாழும் 12,000 ஆண், பெண்களிடம் 2010 முதல் 2017 வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் சர்க்கரை அளவுகள் பரிசோதிக்கப்பட்டு இந்த ஆய்வுகள் நடந்தன. பி எம் ஜே என்ற மருத்துவ ஆய்விதழில் விவரங்கள் அடங்கிய அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. ஆய்வு நடந்த காலத்தில் ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவரின் வாழிடத்தில் அப்போது நிலவிய காற்றின் தரம் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் அளவிடப்பட்டது.

காற்று மாசு அதிகரித்தால் நோயும் அதிகரிக்கும்

பி எம்2.5 துகள்கள் கலந்துள்ள காற்று உள்ள இடங்களில் ஒரு மாதம் வாழ்ந்தவர்களிடம் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக காணப்பட்டது. இவர்கள் ஓராண்டு அல்லது அதற்கும் மேல் நுண் துகள் மாசினால் பாதிக்கப்படும் போது சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஒவ்வொரு 10 ம்யூ/எம்3 அளவு நுண் துகள்களால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகும் போது ஆண்டு சராசரி பிஎம்2.5 அளவில் உள்ள நிலையில் இரு நகரங்களிலும் சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து 22% அதிகரிக்கிறது.

“இந்தியர்களின் நோய்க் குறியியலின்படி (pathophysiology) குறைவான உடற்பருமன் அளவு (BMI) இருந்தாலும் உயர்ந்த அளவு கொழுப்பு எடுத்துக் கொள்ளப்படுவதால் மேற்குலக மக்களை விட சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகமாக உள்ளது” என்று ஆய்வுக்குழுவின் முன்னணி ஆய்வாளர் மற்றும் டெல்லி நாட்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர் சித்தார்த்த மேண்டல் (Siddhartha Mandal) கூறுகிறார்.

40% மக்களிடம் சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படாமலேயே போகிறது என்று மற்றொரு உலகளவிலான ஆய்வு கூறுகிறது. “கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் சூழல் மாசிற்கு ஒரு காரணமாக மட்டும் இருந்த காற்று மாசு இப்போது சர்க்கரை நோய் உயர்விற்கும் முக்கியக் காரணியாக மாறியுள்ளது.

கிராமப்பகுதி மக்களை விட நகர்வாழ் இந்தியர்களிடையில் உடற்பருமன், உணவு மற்றும் உடற்பயிற்சிக் குறைவு போன்றவற்றால் சர்க்கரை நோய் அதிகமாக இருந்தது என்று இது வரை கருதப்பட்டது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் காற்று மாசும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நிரூபித்துள்ளது” என்று ஆய்வுக்குழு ஆசிரியர்களில் ஒருவரும் சென்னை சர்க்கரை நோய் ஆய்வு அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் வி மோகன் (Dr V Mohan) கூறுகிறார்.

காற்று மாசும் இரத்த அழுத்தமும்

டெல்லியில் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் ஆண்டு சராசரி காற்று மாசின் அளவு 90 ம்யூ/எம்3 ஆக இருக்கும்போது இரத்த அழுத்த உயர்வு மற்றும் அதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாதுகாப்பான அளவை விட அதிகமாக பி எம் 2.5 துகள்கள் காணப்படும் இந்திய நகரங்களில் மக்களுக்கு அதிகமாக சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இது ஆத்தராச்குலரோசிஸ் (atherosclerosis) என்ற நிலையை ஏற்படுத்துகிறது. பெருந்தமனி தடிப்பு என்றும் இது அறியப்படுகிறது. ஆத்தராச்குலரோசிஸ் என்பது தமனிகளின் உட்புறச்சுவரில் கொலஸ்ட்ரால், கொழுப்புப் பொருட்கள் படிந்து அவற்றின் உட்புறம் தடிமனாகி வீக்கம் உருவாவதைக் குறிக்கிறது. இது ஒரு நீண்டகால அழற்சி நோய். இதனால் மாரடைப்பு மற்றும் இதயத்தின் இயக்கம் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

“பி எம் 2.5 துகள்களில் சல்பைடுகள், நைட்ரைடுகள், கன உலோகங்கள் மற்றும் இரத்தத் திசுக்களை பாதித்து இதயத் தமனிகளை இறுக்கமடையச் செய்யும் கறுப்பு கார்பன் போன்றவை அடங்கியுள்ளன. இவை கொழுப்பு செல்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதய தசைகளை நேரடியாகப் பாதிக்கிறது” என்று நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர், ஆய்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவர் மற்றும் இதய சிகிச்சை வல்லுனர் டாக்டர் துரைராஜ் பிரபாகரன் (Dr Dorairaj Prabhakaran) கூறுகிறார்.

நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைப் பாதிக்கும் காரணியாக உள்ள பி எம்2.5 துகள்கள் உடலில் இன்சுலின் சுரப்பு மற்றும் அதன் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இந்திய நகரப் பகுதிகளில் ஹைப்போ தைராய்டு நோய் குறைபாடு (hypothyroidism), கருப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றும் குறைபாடு (polycystic ovarian syndrome (PCOS) மற்றும் கர்ப்பகால நீரிழிவு (gestational diabetes) போன்ற குறைபாடுகள் அதிகரிக்கின்றன. காற்று மாசு உடலில் எல்லா ஹார்மோன்களையும் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகளைப் பாதிக்கிறது.

காற்று மாசு உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் வைட்டமின் டி நிலையில் செலுத்தும் தாக்கம், அதனால் தனிநபர் வாழ்க்கைச் சுழற்சியில் பிறந்தபோது இருந்த எடை, கருவுற்றிருக்கும் பெண்களின் ஆரோக்கியம், வயது வந்தவர்களில் இன்சுலினுக்கு எதிர்ப்பாற்றல், பார்க்கின்சன் மற்றும் ஆல்சைமர்ஸ் (Alzheimer’s) உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நிபுணர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.

இது எச்சரிக்கை அளிப்பதாக இருந்தாலும் காற்று மாசைக் குறைத்து, அதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பையும் வாழ்க்கை மாற்றங்களால் ஏற்படும் மற்ற நோய்களையும் குறைக்க இந்த ஆய்வுகள் உதவும். 2016ல் காற்றுமாசு உயர்விற்கு எதிராக உருவான மக்கள் எதிர்ப்பால் மத்திய மற்றும் டெல்லி அரசுகள் பழைய டீசல் வாகனங்களுக்குத் தடை விதித்தது, கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தியது, சாலைகளை மேம்படுத்தியது, புறவழிச் சாலைகளை அமைத்தது, வேளாண் கழிவுகளை எரிக்கத் தடை விதித்தது போன்ற கொள்கை முடிவுகளால் 2016-2021 காலத்தில் பிஎம்2.5 மாசின் அளவு 22% குறைந்தது.

காற்று மாசு முற்றிலும் குறையவில்லை என்றாலும் இது வரவேற்கத்தக்கது. இது போன்ற உள்ளூர் அளவிலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/global-development/2023/nov/01/air-pollution-raises-risk-of-type-2-diabetes-says-landmark-indian-study-acc?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

கடந்த இருபது ஆண்டுகளில் அதி தீவிர காலநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 16 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. சமீப பத்தாண்டுகளில் புயல்கள், வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைத் தாக்குதல்கள், வறட்சி ஆகியவற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்; உடைமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மனித செயல்களால் உருவாகியுள்ள புவி வெப்ப உயர்வு ஏற்படுத்தும் சேதங்களைப் பற்றிய முதல் உலகளாவிய ஆய்வு இது. 2000 முதல் 2019 வரையுள்ள காலத்தில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 140 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேத மதிப்பு ஆண்டிற்கு ஆண்டு வேறுபடுகிறது. 2022ல் மட்டும் இதனால் 280 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று சமீபத்திய தரவு விவரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

வருமானம் குறைந்த நாடுகளில்

வருமானம் குறைந்த நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதம் பற்றி மிகக் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. தரவு விவரங்கள் குறைவாகவே உள்ளன. வெப்ப உயர்வினால் ஏற்படும் பயிர் இழப்பு, கடல் நீர் மட்ட உயர்வு போன்றவை இத்தகைய விவரங்களில் சேர்க்கப்படுவதில்லை. இழப்பு குறித்த பொருளாதார தரவுகளை அதி தீவிர காலநிலை சம்பவங்கள் புவி வெப்ப உயர்வை எந்த அளவு மோசமாகப் பாதிக்கிறது என்பது பற்றிய விவரங்களுடன் இணைத்து ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.hurricane katrinaகடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் காலநிலை மாற்றத்தால் உண்டாகும் அதி தீவிர வானிலையால் 1.2 பில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் இரண்டு பகுதி உயிரிழப்புகள், மற்றொரு பகுதி சொத்துகள் இழப்பு மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஹார்வி (Harvey) மற்றும் நார்கிஸ் (Nargis) சுழற்காற்று காலநிலை சேதங்களில் மூன்றில் இரண்டு பங்கு இழப்பிற்குக் காரணமாக இருந்தன.

இழப்பிற்கு காரணமான பேரிடர்கள்

16% சேதம் வெப்ப அலைத் தாக்குதல்கள், 10% இழப்புகள் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சியால் ஏற்பட்டன. ஐநாவின் சார்பில் 2022ல் நடந்த காலநிலை மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட சேதம் மற்றும் இழப்பீட்டு உடன்படிக்கையின்படி ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவியைக் கணக்கிட, காலநிலை பாதிப்பால் ஏற்பட்டுள்ள தனிநபர் இழப்பை மதிப்பிட, நிதியுதவியின் விநியோகம் போன்றவற்றில் இந்த ஆய்வு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“தரவு விவரங்களை விட நிலைப்படுத்தப்பட்ட கணினி மாதிரி கணிப்புகள் பாதிப்புகளை குறைவாகவே மதிப்பிடுகின்றன. தீவிர காலநிலை சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. இவற்றால் கொல்லப்பட்டவர்கள், பொருளாதாரச் சேதங்கள் பற்றிய தரவுகள் போதுமான அளவு இல்லை. இதனால் 16 மில்லியன் டாலர் இழப்பு என்பது குறைவான மதிப்பு. ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் குறித்த தரவுகள் மட்டுமே முழுமையாக உள்ளன. சஹாரா துணைக்கண்டத்தில் பேரிடரால் உயிரிழந்தவர்களைப் பற்றி விவரங்கள் இல்லை” என்று சக ஆய்வாளர் ரெபெக்கா நியூமேனுடன் (Rebecca Newman) இணைந்து இந்த ஆய்வை நடத்திய நியூசிலாந்து வெலிங்டன் விக்டோரியா பல்களைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்குழுவின் தலைவர் பேராசிரியர் இலான் நய் (Illan Noy) கூறுகிறார்.

ஏழு மடங்கு உயர்வு

1970களுக்குப் பிறகு மோசமான வானிலையால் உண்டான இழப்புகள் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது என்று உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) கூறுகிறது. புவி வெப்ப உயர்வுடன் ஒப்பிடும்போது மக்கட்தொகைப் பெருக்கம், நகரங்களை நோக்கிய இடம்பெயர்வு, செய்தி வெளியிடுதலில் உண்மைத் தன்மை போன்றவற்றால் இழப்பின் அளவு மாறும் என்று நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Journal Nature Communications) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

மோசமான சூழல் பேரிடர்களை புவி வெப்ப உயர்வு எவ்வாறு அடிக்கடி ஏற்படுத்துகிறது என்பது பற்றி நூற்றுக்கணக்கான பல சிறிய ஆய்வுகள் நடந்துள்ளன. இது மனித செயல்கள் மூலம் உருவாகும் புவி வெப்ப உயர்வினால் ஏற்படும் சேதத்தின் மதிப்பை சிறிய அளவுகளில் கணக்கிடுகிறது. இத்தகைய சிறிய ஆய்வு முடிவுகளின் மதிப்புகளை ஆய்வாளர்கள் சர்வதேச பேரிடர் தரவு தளத்தில் (International disaster data base) பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளுடன் இணைத்து ஆராய்ந்தனர்.

இந்த தளத்தில் பேரிடரால் 10 பேர் உயிரிழந்திருந்தாலும், 100 பேரின் உடைமைகள் சேதமடைந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட நாடுகளில் இதனால் அவசரநிலை அறிவிக்கப்பட்டாலும், பன்னாட்டு உதவி கோரப்பட்டிருந்தாலும் அது பற்றிய அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வேறுபட்ட இந்த புதிய அணுகுமுறையை ஆய்வாளர்கள் பயன்படுத்தி ஆராய்ந்தபோது காலநிலை பாதிப்பால் சராசரியாக ஆண்டிற்கு 140 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

60 முதல் 230 பில்லியன் டாலர் வரை இழப்பின் மதிப்பு உள்ளது. கணினி மாதிரிகள் கணித்துக் கூறிய மதிப்புகளை விட இது மிக அதிகம். உலகில் காணப்படும் மிக உயர்ந்த வெப்பநிலையை ஆதாரமாகக் கொண்டு இந்த புதிய ஆய்வுகள் நடந்தன. ஆனால் முந்தைய ஆய்வுகள் கணினி மாதிரிகள், உலகளாவிய சராசரி வெப்பநிலையை பயன்படுத்தி ஆராய்ந்தன.

அதிக இழப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்

2003ல் ஐரோப்பாவைத் தாக்கிய வெப்ப அலை, 2008ல் மியான்மாரை பாதித்த நார்கீஸ் சுழற்காற்று, 2010ல் சோமாலியாவில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் ரஷ்யாவை பாதித்த வெப்ப அலை ஆகியவை இதுவரை நடந்தவற்றில் மிக அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளன. 2005 மற்றும் 2017ல் ஹரிக்கேன் புயல்கள் அமெரிக்காவைத் தாக்கியபோது மிக அதிக பொருளாதார சேதம் ஏற்பட்டது. உயிரிழப்பின் மதிப்பைக் கணக்கிடுவது பலருக்கும் சங்கடத்தைத் தருகிறது. ஆனால் பல துறைகளில் நிதி ஒதுக்கீட்டிற்கு இது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“உலகளவில் காலநிலை மாற்றம் சேதங்களின் அளவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்குதல் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது இந்த சேதங்கள் புறக்கணிக்கத் தக்கவையே என்று பலர் கூறுவது தவறு என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது. கண்ணெதிரில் நிகழும் சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வுகள் அமைந்துள்ளன என்பதே இதற்குக் காரணம்” என்று உலக வங்கி ஆய்வாளர் டாக்டர் ஸ்டெஃபான் ஹாலிகார்ட் (Dr Stepaane Hallegatte) கூறுகிறார்.

பணக்கார நாடுகளில் காலநிலை ஆய்வு நிலையங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. ஏழை நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய அங்கு அதிக ஆய்வு அமைப்புகள் தோற்றுவிக்கப்பட வேண்டும். புவி வெப்ப உயர்வை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியாத நிலையை நோக்கி பூமியை இழுத்துச் செல்லும் மனிதன் அதைக் குறைக்கவேனும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த ஆய்வின் முடிவுகள் வலியுறுத்துகின்றன.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/oct/09/climate-crisis-cost-extreme-weather-damage-study?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

கப்பல் உடைப்பது இன்று ஒரு மிகப் பெரிய தொழில். ஆனால் இது கடுமையான சூழல், ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கப்பலின் அடிப்பகுதியில் உடைப்பதற்குரிய அறைகளில் நச்சு வாயுக்கள் இருப்பதைக் கண்டறிய உயிருடன் இருக்கும் ஒரு கோழியின் காலில் கயிற்றைக் கட்டி கீழ்நோக்கி இறக்கி பார்க்கப்படுகிறது. கோழி சாகவில்லை என்றால் ஆபத்தில்லை என்று பொருள். உலகம் முழுவதும் ஒரு இலட்சம் அளவு கப்பல்கள் உள்ளன. ஒரு கப்பலின் ஆயுள் 20-25 ஆண்டுகள்.

ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 700 கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. பலவகை கப்பல்களைக் கருத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டும். இதில் 90% கப்பல்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் உடைக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கப்பல் உடைக்கும் மையம் உலகில் மூன்றாவது பெரிய மையம்.

சுற்றுச்சூழல் நாசம்

இத்தொழிலில் வேலை செய்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன் இது கடுமையான சூழல் நாசத்தை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளுக்குக் காரணமாகும் பாதரசம், சல்புரிக் அமிலம், ஆஸ்பெட்டாஸ் போன்றவை உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்கள் ஒவ்வொரு கப்பல் உடைக்கப்படும்போதும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.

ஒரு நடுத்தர கப்பல் உடைக்கப்படும்போது அதனால் 7 டன் ஆஸ்பெஸ்டாஸ் மாசு ஏற்படுகிறது. இது பிராந்திய சந்தைகளைச் சென்றடைகிறது. பெரும்பாலான மையங்களில் மாசு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதில்லை. இதனால் இந்த மாசுக்கள் விவசாயம் மற்றும் மீன் வளத்தை அழித்து எல்லா இடங்களிலும் பரவுகிறது. பயிற்சி வழங்கப்படாத தொழிலாளிகளே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.ship breakingபாதுகாப்பு நடவடிக்கைகள்

நச்சுத்தன்மை அதிகமுள்ள வேதிப்பொருட்கள் கையாளப்பட வேண்டிய இத்தொழிலில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. உரிய பயிற்சி வழங்கப்படாததால் தொழிலாளர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர்.

உடைக்கப்படும் கப்பலில் இருந்து அதிக அளவில் கிடைக்கும் எஃகு, தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எஃகில் 10% கப்பல் உடைக்கும் தொழிலில் இருந்தே பெறப்படுகிறது. பங்களாதேஷில் இது 20%. 1930களில் கப்பல் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பங்களே இன்றும் ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

அக்காலத்தில் ஐரோப்பாவிலேயே கப்பல்கள் அதிகமாக உடைக்கப்பட்டன. 1960ல் வீசிய ஒரு புயற்காற்றில் பங்களாதேஷ் சிட்டகாங் துறைமுகத்திற்கு கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பல் அடித்து வரப்பட்டது. கரை தட்டிய கப்பலை பலமுறை முயற்சி செய்தும் கடலில் இறக்க முடியவில்லை. இவ்வாறு நான்கைந்து ஆண்டுகள் கரையில் கிடந்த கப்பலை அங்கு இருந்த ஒரு எஃகு நிறுவனம் விலைக்கு வாங்கியது; உடைத்தது.

இதற்கு பல ஆண்டுகள் ஆயின என்றாலும் அந்நாட்டில் கப்பல் உடைக்கும் தொழிலிற்கு இந்த சம்பவம் காரணமாக அமைந்தது. சூழல் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டபோது உடைக்கப்பட வேண்டிய கப்பல்கள் ஐரோப்பாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வரத் தொடங்கின. கடுமையான சூழல் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் உடைந்த கப்பலுக்கு குறைந்த விலையே கிடைக்கிறது. பங்களாதேஷில் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 69% புதிய கப்பல் வாங்கவே செலவிடப்படுகிறது.

ஆனால் அந்நாட்டில் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் வருமானத்தில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைகள் ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப்படுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் 2003ல் உருவாக்கப்பட்ட பேசில் உடன்படிக்கைபடி இத்தொழில் நடைபெறுகிறது. உடைக்கும்போது கிடைக்கும் 98% பொருட்கள் அங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

உடைக்கப்படுவதற்கு முன்

ஆபத்தான பொருட்களின் பட்டியல் உருவாக்கப்பட்ட பிறகே அங்கு கப்பல் உடைக்கும் வேலை ஆரம்பிக்கிறது. வாயுக்கள் வெளியேற கப்பலில் இருக்கும் எல்லா துளைகளும் திறந்து வைக்கப்பட வேண்டும். சில வேலைகள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்துபவை என்றாலும் கப்பலை முழுமையாக உடைக்க வேண்டும். தீங்கு விளைவிக்கக் கூடிய மற்றும் தீங்கற்ற பொருட்களை தனித்தனியாகப் பிரிக்க வேண்டும்.

ஆஸ்பெஸ்டாஸை பிளாஸ்டிக்கில் பொதிந்து எஃகால் ஆன பெட்டகங்களில் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியும் சரியான முறையில் முழுமையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். ஐரோப்பாவில் கப்பல்கள் இந்த முறையில் உடைக்கப்படுகின்றன. ஆனால் கப்பல் உடைக்கும் தலைநகரங்கள் என்று வர்ணிக்கப்படும் இந்தியா மற்றும் பங்களாதேஷில் இதற்கு முற்றிலும் மாறான விதத்தில் இது நடைபெறுகிறது.

உடைக்கப்படும் கப்பலில் இருந்து கிடைக்கும் மின் கம்பிகள், இருக்கைகள், இயந்திரங்கள் உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்கப்படுகின்றன. மின் கம்பிகள் எரிக்கப்பட்டு அதில் இருந்து செம்பு எடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆடைகள், முகக் கவசங்கள் மற்றும் காலணிகள் அணிவதில்லை. செலவு அதிகமாகும் என்று மின் தூக்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை.

கடற்கரையில் குவிக்கப்படும் கழிவுகள்

பிளாஸ்டிக் அடங்கிய வண்ணப்பூச்சு பூசப்பட்ட எஃகு பலகைகள், லாபம் தராத கழிவுகள் கடற்கரையில் போட்டு எரிக்கப்படுகின்றன. பங்களாதேஷில் கப்பல் உடைக்கும் மையங்களில் 79,000 டன் ஆஸ்பெஸ்டாஸ், மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 240,000 பாலி குளோரினேட்டட் பை பீனைல், ஓசோன் அடுக்கைப் பாதிக்கும் 210,000 மற்ற கழிவுகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.

1980களில் கப்பல்களில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுவது பல வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்டது. இப்பொருளைக் கையாள அங்கு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. இதனால் அங்கு லாபகரமாக கப்பல்களை உடைக்க முடிவதில்லை. அதனால் முன்பு கட்டப்பட்ட பழைய கப்பல்கள் ஆசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு உடைக்கப்படுகின்றன.

ஆபத்தான நச்சுப்பொருட்களைக் கையாளுதல், காயங்கள், வெட்டுக்காயங்கள், ஆபத்தான வாயுக்களை சுவாசிப்பது, தீக்காயங்கள், மூச்சுத்திணறல், புற்றுநோய் உட்பட பல பாதிப்புகள் ஆசியா கப்பல் உடைக்கும் மையங்களில் காணப்படுகின்றன. ஆனால் ஐரோப்பாவில் தொழிலில் ஈடுபடும்போது ஏற்படும் விபத்துகளுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும். இது இத்தொழிலை அங்கு லாபம் இல்லாத ஒரு தொழிலாக மாற்றியது.

அங்கு கப்பலை உடைத்து விற்றால் கிடைக்கும் தொகையைவிட அதை உடைப்பதற்கு ஆகும் செலவு அதிகம். பங்களாதேஷில் ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளியேனும் இதில் ஈடுபடும்போது மரணமடைகிறார். ஏற்படும் காயங்கள் இதைவிட மிக அதிகம். அங்கு இதில் ஈடுபட்டுள்ளவர்களில் 20 சதவிகிதத்திற்கும் கூடுதலானவர்கள் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே.

அலாங்

குஜராத் அலாங் துறைமுகமே உலகில் மிகப்பெரிய கப்பல் உடைக்கும் மையம். இதன் மூலம் 15,000 முதல் 20,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், பல லட்சக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஒரிசா, உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் வந்த தொழிலாளர்களே அதிகமாக வேலை செய்கின்றனர். இவர்கள் பரிதாபகரமான சூழலில் வாழ்கின்றனர். மருத்துவமனை வசதி பாவ்நகர் என்ற இடத்தில் 50 கி மீ தூரத்திலேயே உள்ளது.

அலையாத்திக் காடுகளின் அழிவு

பங்களாதேஷில் 2009ல் கப்பல்களை உடைக்கும் மையங்களில் கடலில் இருந்து கப்பல்களை கரைக்கு அருகில் கொண்டு வர வசதியாக அங்கிருந்த 40,000 அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தக் காடுகளே கடல் பேரிடர்களில் இருந்து இப்பகுதியை காப்பாற்றி வந்தன. கடலில் கலக்கும் நச்சுப்பொருட்கள் 21 வகை மீனினங்களை அழித்துள்ளன. ஆசியாவில் இந்த நச்சு மாசினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த ஆய்வும் இதுவரை நடத்தப்படவில்லை.

தங்கள் சூழல் மற்றும் குடிமக்களை பாதுகாக்க வளர்ந்த நாடுகள் கப்பல்களை ஆசியாவிற்கு கொண்டு வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு. இது இங்கு உள்ள தொழிலாளர்கள் மற்றும் சூழலை அழிக்கிறது. இதையெல்லாம் ஆள்பவர்கள் எவ்வளவு காலம் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்?

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/all-you-need-to-know-about-ship-breaking-and-its-environmental-aspect-eco-story-1.8584101

&

https://en.wikipedia.org/wiki/Alang_Ship_Breaking_Yard

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It