மாரடைப்பைத் தடுக்கும் சக்தி ‘இஞ்சி’க்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

“இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.  கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக் கொள்ளவேண்டும்.  கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.  இரத்த நாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று.  இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்தநாளங் களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர். S.K. வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவ குணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது.  முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.  அடுத்தவாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது.  அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது.  ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

இதன் மூலம் இரத்த நாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது.  மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற் கான சாத்தியம் அதிகம்.  இதற்கு இரத்த நாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும்.  மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்த நாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.

எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.